வேலூர்: திருப்பூரில் இருந்து சித்தூருக்கு கடந்த 6ம் தேதி ரயிலில் பயணித்த 36 வயதான 4 மாத கர்ப்பிணி பெண், ஹேமராஜ் என்ற கொடூரனால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டார். அவர் படுகாயத்துடன் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவரது வயிற்றிலேயே 4 மாத சிசு நேற்றுமுன்தினம் உயிரிழந்தது.
இதனை தொடர்ந்து உயர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால் ராணிப்பேட்டையில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு மாற்றப்பட்டுள்ளார். அங்கு வயிற்றில் உயிரிழந்த சிசுவை அகற்றுவதற்கான தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் கூறுகையில், அந்தப் பெண்ணுக்கு ஒவ்வொரு பிரச்னையாக உடலில் ஏற்படுவதால் சிறப்பு மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர். அவர்களின் ஆலோசனைப்படி உயர் சிகிச்சை தேவைப்படுவதால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவியையும் அரசு செய்து வருகிறது என்றனர்.
The post ரயிலில் இருந்து தள்ளியதில் சிசு உயிரிழப்பு; தனியார் மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்ட பெண் மாற்றம்: உயர் சிகிச்சைக்கு சிறப்பு மருத்துவ குழு பரிந்துரை appeared first on Dinakaran.