ரஞ்சி கோப்பை காலிறுதி: தமிழக அணி வெற்றி பெற இமாலய இலக்கு நிர்ணயித்த விதர்பா

5 hours ago 3

நாக்பூர்,

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் காலிறுதி ஆட்டங்கள் தற்போது நடந்து வருகிறது. நாக்பூரில் தொடங்கியுள்ள ஆட்டத்தில் தமிழ்நாடு - விதர்பா அணிகள் மோதுகின்றன. இதில் முதல் இன்னிங்சில் விதர்பா 353 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து தடுமாறியது.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தமிழக அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 7 ரன்னிலும், அடுத்து வந்த முகமது ஒரு ரன்னிலும், பிரதோஷ் ரஞ்சன் பால் 48 ரன்னிலும், சோனு யாதவ் 32 ரன்னிலும் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்ந்தனர். முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவர்களில் 225 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. விதர்பா தரப்பில் ஆதித்ய தாக்ரே 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 128 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 5 விக்கெட்டுக்கு 169 ரன்கள் அடித்து 297 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. யாஷ் ரத்தோட் 55 ரன்னுடனும், ஹர்ஷ் துபே 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தமிழக அணி தரப்பில் சாய்கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த விதர்பா 272 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தமிழகம் வெற்றி பெற 401 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 112 ரன்களும், ஹர்ஷ் துபே 64 ரன்களும் குவித்தனர். தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 401 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழக அணி 25 ரன்களுக்குள் ஒரு விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.

Read Entire Article