
விசாகப்பட்டினம்,
11வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாப்படுகிறது. ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற கருப்பொருளில் உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிலையில், ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு யோகாசனம் செய்த பிரதமர் மோடி, அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது;
உலக மக்களின் அன்றாட அங்கமாக யோகா மாறியுள்ளது. யோகா உலகத்துடன் ஒற்றுமையை நோக்கிய பயணத்தில் நம்மை வழிநடத்துகிறது. மேலும் நாம் தனிமைப்படுத்தப்பட்ட தனிநபர்கள் அல்ல, இயற்கையின் ஒரு பகுதி என்பதை நமக்குக் கற்பிக்கிறது.
நவீன ஆராய்ச்சி மூலம் இந்தியா யோகா அறிவியலை மேம்படுத்துகிறது. யோகா துறையில் ஆதார அடிப்படையிலான சிகிச்சையையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். டெல்லி எய்ம்ஸ் இந்த விஷயத்தில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. இதயம் மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்திலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் அதன் ஆராய்ச்சி காட்டுகிறது.
இன்று முழு உலகமும் சில பதற்றங்கள், அமைதியின்மை மற்றும் பல பகுதிகளில் உறுதியற்ற தன்மை அதிகரித்து வருகிறது. யோகா உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது. மனதை ஆசுவாசப்படுத்த, சமாதானப்படுத்த யோகா உதவுகிறது. யோகாவை நாம் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம்."
இவ்வாறு அவர் பேசினார்.