தென்காசி: குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை பெய்த மழையின் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அனைத்து பிரதான அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் நேற்று முன்தினம் பகல் முழுவதும் வெயில் அவ்வளவாக இல்லை. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நேற்று அதிகாலை முதல் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் விழுந்தது. ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இதனால் பாதுகாப்பு கருதி நேற்று அதிகாலை 4 மணி முதல் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய அனைத்து பிரதான அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். தடை காரணமாக வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர். நேற்று பகலிலும் அவ்வப்போது மழை பெய்தது. வெயில் இல்லை. வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது.
The post மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலத்தில் குளிக்க தடை appeared first on Dinakaran.