மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் 2.0 செயல்படுத்த 21ம் தேதி அஞ்சல் பரிவர்த்தனைகள் இல்லா நாளாக கடைபிடிக்கப்படும் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு

9 hours ago 3

வேலூர், ஜூலை 16: அஞ்சல்துறையின் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் 2.0 செயல்படுத்த வசதியாக வரும் 21ம் தேதி மட்டும் அஞ்சல் பரிவர்த்தனைகள் இல்லா நாளாக கடைபிடிக்கப்படும் என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முரளி தெரிவித்துள்ளார். அஞ்சல் துறையின் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் 2.0 அட்வான்ஸ்டு போஸ்டல் டெக்னாலஜி 2.0 வரும் 22ம் தேதி முதல் வேலூர் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய தொழில்நுட்ப மென்பொருள் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கொள்கையின்படி, நாட்டின் வளர்ச்சிக்கு துணை செய்வதாக அமையும்.

இத்தகைய மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவையை, தடையற்ற மற்றும் பாதுகாப்பான முறையில் செயல்படுத்த வரும் 21ம் தேதி ஒரு நாள் மட்டும் அஞ்சல் பரிவர்த்தனைகள் ஏதும் இல்லா நாளாக கடைபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, வரும் 21ம் தேதி, வேலூர் கோட்டத்திற்கு உட்பட்ட அஞ்சல் நிலையங்களில் எந்தவொரு தபால் சேவையும் மேற்கொள்ளப்பட மாட்டாது. புதிய தொழில்நுட்பம் சீராக செயல்படுவதை உறுதி செய்வதற்கு இந்த தற்காலிக சேவை இடைநிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தவிர்க்க முடியாத ஒரு நாள் சேவை இல்லாத நாள், அனைத்து மக்களுக்கும் மிகச்சிறந்த, துரித டிஜிட்டல் சேவைகளை பெற வழிவகுக்க எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, பொதுமக்கள் இந்த சேவை இல்லா நாளை கணக்கில் கொண்டு தங்கள் அஞ்சல் சேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவை இல்லா நாளில் அஞ்சல்துறைக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முரளி கேட்டுக் கொண்டுள்ளார்.

The post மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் 2.0 செயல்படுத்த 21ம் தேதி அஞ்சல் பரிவர்த்தனைகள் இல்லா நாளாக கடைபிடிக்கப்படும் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article