மேட்டூர், ஜூன் 4: மேட்டூர் அணையின் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை, நீர்வளத்துறையின் நீரியல் ஆராய்ச்சி மற்றும் தரக்கட்டுப்பாட்டு தலைமை பொறியாளர் சுந்தரராஜன் நேற்று ஆய்வு செய்தார். மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு பாலத்தின் தூண்கள் மற்றும் வளைவுகளை பலப்படுத்தும் பணி, சுமார் ரூ.19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. அதேபோல், கீழ்மட்ட மதகிலிருந்து மேல்மட்ட மதகிற்கு செல்லும் சுரங்க கால்வாய் 183 மீட்டர் நீளத்திற்கு ரூ.11 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. மேலும் ஆங்கிலேயர் காலத்து ராட்சத மதகுகளை மாற்றி, புதியதாக பொருத்தும் பணி மற்றும் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை, சென்னை நீரியல் ஆராய்ச்சி மற்றும் தர கட்டுப்பாட்டு தலைமை பொறியாளர் சுந்தரராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, திருச்சி மண்டல தர கட்டுப்பாட்டு செயற்பொறியாளர் புகழேந்தி, உதவி செயற்பொறியாளர் கவிதா ராணி, உதவி பொறியாளர் லதா ஆகியோர், 16 கண் பாலம் பகுதியிலும், வலதுகரை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுரங்க வாய்க்கால் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, மேட்டூர் அணையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மேட்டூர் நீர்வளத்துறை செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் விளக்கி கூறினர்.
The post மேட்டூர் அணையில் நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு appeared first on Dinakaran.