
மேட்டூர்,
கர்நாடகம் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடர் மழை பெய்தது. இதன்காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பும் தருவாயை எட்டியதை அடுத்து பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது. குறிப்பாக நேற்று முன்தினம் வினாடிக்கு 60 ஆயிரத்து 740 கனஅடி வீதம் நீர்வரத்து காணப்பட்டது. இந்த நீர்வரத்தானது நேற்று மாலையில் வினாடிக்கு 80 ஆயிரத்து 984 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
120 அடி உயர மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 118 அடியை எட்டியது. அதே நேரத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடியில் இருந்து வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்த தண்ணீரானது, அணையையொட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடி வீதமும், அணையின் மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி வீதமும் திறந்து விடப்பட்டது. அப்போது அணையின் நீர் இருப்பு 88.59 டி.எம்.சி.யாக (ஒரு டி.எம்.சி. என்பது நூறு கோடி கனஅடி) இருந்தது.
முன்னதாக நேற்று பகலில் மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடிக்கு மேல் உயர்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்தானது தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, நீர்வளத்துறையின் மேட்டூர் உதவி நிர்வாக பொறியாளர் செல்வராஜ், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று மதியம் 117.39 அடியை எட்டி உள்ளது. அணைக்கு நீர்வரத்தானது தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை தன் உச்சபட்ச நீர்மட்டமான 120 அடியை எப்போது வேண்டுமானாலும் எட்டும் சூழ்நிலையில் உள்ளது.
இதன் காரணமாக அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி முதல் வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி வரை உபரிநீர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் திறந்து விட வாய்ப்பு உள்ளது. எனவே சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்ட கலெக்டர்கள் மூலம் அந்தந்த மாவட்டம் முழுவதும் காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
காவிரி கரையோரம் வசித்து வரும் தாழ்வான பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் உடைமைகளுடன் மேடான பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து இதே அளவில் இருந்தால் இன்று அல்லது நாளைக்குள் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மேட்டூர் அணையின் மொத்த உயரமான 120 அடியில் தற்போது 119.22 அடியை எட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீர்வரத்து நேற்று 80,984 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது அது 68 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
அணையின் மொத்த கொள்ளளவான 93.4 டி.எம்.சி.யில் தற்போது நீர் இருப்பு 92.23 டி.எம்.சி.யாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 26,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.