மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து உபரி தண்ணீர் திறப்பால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 78ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 73,452கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் ஒரு வாரத்தில் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் இரு அணைகளில் இருந்தும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 25ம் தேதி 45,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் காலை 60,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு 76,000 கனஅடியாகவும், இரவு 8 மணியளவில் 85,000 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது.
நேற்று காலையும் அதே அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு நிலவரப்படி கபினி மற்றும் கேஆர்எஸ் ஆகிய இரு அணைகளிலிருந்தும் விநாடிக்கு 86,800 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லில் நேற்று காலை 65,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 4 மணியளவில் 78,000 கன அடியாகவும், இரவு 88ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 78ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. அங்குள்ள மெயினருவி மற்றும் ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அங்கு வரும் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர். அதே சமயம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 43,892 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 4மணியளவில் 60,740 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 73452கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 22,500கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட, வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 112.73 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை 114 அடியாகவும், மாலை 4மணியளவில் 114.74 அடியாகவும், இன்று காலை 116.84அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 4 நாட்களில் நீர்மட்டம் 4.16அடி உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 88.59டிஎம்சியாக உள்ளது. நீர்வரத்து அதேஅளவில் இருந்தால் ஒரு வார காலத்தில் மேட்டூர் அணை வரலாற்றில் 45வது ஆண்டாக நிரம்பும் வாய்ப்பு உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணை வேகமாக நிரம்பி வருவதால் பாசனத்திற்கு முழுமையாக தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 73,452 கனஅடியாக அதிகரிப்பு: ஒரு வாரத்தில் அணை நிரம்ப வாய்ப்பு appeared first on Dinakaran.