மேட்டூர் அணை இன்று மாலை முழு கொள்ளளவை எட்டுகிறது; உபரிநீர் திறக்க வாய்ப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

10 hours ago 2

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை தாண்டிய நிலையில் இன்று மாலைக்குள் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உபரிநீர் திறக்கப்படும் என்பதால் காவிரி பாயும் 11 மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மற்றும் கேரள மாநில மலை பகுதிகளில் பெய்த தொடர் மழையால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் கடந்த வாரம் நிரம்பின.

இதையடுத்து அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக இரு அணைகளில் இருந்தும் 80 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி பகுதிகளில் பாறைகளை மூழ்கடித்து புது வெள்ளம் பாய்கிறது. மேலும் காவிரியின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் பாய்ந்து வருகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க இன்று 10வது நாளாக தடை நீடிக்கிறது.

மேலும் ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நடைபாதை மூடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு குறைப்பால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து குறைந்து வருகிறது. நேற்று காலை ஒகேனக்கல்லில் 78 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 65 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடக அணைகளின் உபரிநீர் திறப்பு காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

கடந்த 25ம் தேதி காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,332 கனஅடியாக அதிகரித்தது. பின்னர் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை வினாடிக்கு 80,984 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இதனால் இன்று காலையில் மேட்டூர் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதால் அணைக்கு நீர் வரத்து இன்றுகாலை வினாடிக்கு 68,007 கனஅடியாக குறைந்தது. இதனால் அணை நிரம்புவது தாமதமாகி உள்ளது. கடந்த 25ம் தேதி 112.71 அடியாக இருந்த நீர் மட்டம் கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக இன்று காலை 119.22 அடியாக உயர்ந்தது. கடந்த 4 நாட்களில் அணையின் நீர் மட்டம் 6.51 அடி உயர்ந்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 26,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று மாலைக்குள் மேட்டூர் அணை அதன் வரலாற்றில் 45வது ஆண்டாக நிரம்பும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணையின் நீர் இருப்பு 92.23 டி.எம்.சியாக உள்ளது.
அணை நிரம்பும் நிலையில் இருப்பதால் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று காவிரி கரையோர மக்களுக்கும் மேட்டூர் அணையின் உபரிநீர் கால்வாய் பகுதியில் தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று மாலையில் அணை நிரம்பியதும் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாக நீர் வெளியேற்றப்படும் என்பதால் காவிரி பாயும் 11 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களின் வலது மற்றும் இடது புற கால்வாய் பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். தற்போது அணை முழு கொள்ளளவை எட்டுவதால் முன்கூட்டியே கால்வாய் பாசனத்திற்கு நீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

The post மேட்டூர் அணை இன்று மாலை முழு கொள்ளளவை எட்டுகிறது; உபரிநீர் திறக்க வாய்ப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article