புதுடெல்லி: சந்தேகங்களுக்கு தீர்வை தர வேண்டிய தேர்தல் ஆணையமே ஆதாரங்களை நீக்குவதாக குற்றம்சாட்டி உள்ள ராகுல் காந்தி, ‘மேட்ச் பிக்சிங் நடந்து விட்டது’ என சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘கம்ப்யூட்டரே சுயமாக சரிபார்க்கும் வடிவத்தில் வாக்காளர் பட்டியல் தர முடியாது. சட்டத்தை மாற்றுவதன் மூலம், சிசிடிவி பதிவுகள் மறைக்கப்பட்டு விட்டன. இப்போது, ஓராண்டுக்கு பதிலாக 45 நாளில் தேர்தல் புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள் அழிக்கப்பட உள்ளன. இதன் மூலம் மேட்ச் பிக்சிங் நடந்து முடிந்து விட்டதை தெளிவாக அறிய முடிகிறது. சந்தேகங்களுக்கான பதில்களை தர வேண்டியவர்களே ஆதாரங்களை அழிக்கின்றனர்.
முடிவுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட தேர்தல் ஜனநாயகத்திற்கு தரப்படும் விஷம்’’ என கூறி உள்ளார். இத்தகைய வீடியோ பதிவுகளை தேர்தல் சட்டங்கள் கட்டாயப்படுத்தவில்லை என்றும், சமீபகாலங்களில் தேர்தலில் போட்டியிடாத நபர்கள் வீடியோ பதிவு தகவல்களை தவறாக பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கட்டுக்கதைளை பரப்புவதாகவும், இது எந்தவொரு சட்டப்பூர்வ முடிவுக்கும் வழிவகுக்காது என்பதால் மறுஆய்வு செய்யப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
மோடி சொல் வீரர்… செயல்வீரர் அல்ல…
ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில்,’மேக் இன் இந்தியா தொழிற்சாலை ஏற்றத்தை உறுதியளிக்கிறது. அப்படியானால் உற்பத்தி ஏன் மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளது. இளைஞர்களின் வேலையின்மை மிகவும் அதிகரித்துள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதிகள் இரட்டிப்பாகியுள்ளது ஏன்? மோடி ஜீ தீர்வுகளில் அல்ல, ேபசும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளார். 2014ம் ஆண்டு முதல் உற்பத்தியானது நமது பொருளாதாரத்தில் 14 சதவீதமாக குறைந்துள்ளது. பிரதமர் மோடியிடம் புதிய யோசனைகள் எதுவும் இல்லை. சரண் அடைந்துவிட்டார். நேர்மையான சீர்திருத்தங்கள் மற்றும் நிதி ஆதரவு மூலம் லட்சக்கணக்கான உற்பத்தியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு அடிப்படை மாற்றம் இந்தியாவுக்கு தேவை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ‘மேட்ச் பிக்சிங்’ நடந்து விட்டது; தேர்தல் ஆணையமே ஆதாரங்களை அழிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.