
பெலகாவி:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகிவரும் நிலையில், பாகிஸ்தானுடன் 'போர் தொடுக்க வேண்டிய அவசியமில்லை' என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சு பாகிஸ்தான் நாட்டு ஊடகங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து அவரை பா.ஜ.க. தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து விளக்கம் அளித்த சித்தராமையா, போர் தீர்வாகாது என்று கூறியதாகவும், தவிர்க்க முடியாத சூழலில் போர் வரலாம் என்று கூறியதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், பொது இடத்தில் கோபத்தை கட்டுப்படுத்த தவறியதன் மூலம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் சித்தராமையா.
மத்திய அரசைக் கண்டித்து பெலகாவியில் காங்கிரஸ் சார்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டத்தில் சித்தராமையா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பெண்கள் சிலர் கூட்டத்தில் புகுந்து கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எதிர்ப்பு முழக்கமிட்டவர்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதைப் பார்த்து கோபமடைந்த சித்தராமையா, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரியை மேடைக்கு அழைத்து கண்டித்தார். என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? என்று கேட்டு அந்த அதிகாரியை அடிப்பதற்கு கை ஓங்கினார். ஆனால், அப்படியே நிறுத்திக்கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. பொது மேடையில் சித்தராமையா நடந்து கொண்ட விதம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.