
கராச்சி,
பாகிஸ்தான் அணியில் கடந்த சில ஆண்டுகளாகவே சீரற்ற தன்மை நிலவி வருகிறது. அணியின் பயிற்சியாளரை மாற்றுதல், அணியின் கேப்டன்களை மாற்றுதல், அணியின் தேர்வுகுழுவினரை மாற்றுதல் என பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதனால் அந்த அணி அடுத்தடுத்த ஐ.சி.சி தொடரிகளில் சோபிக்க முடியாமல் தடுமாறி வருகிறது.
குறிப்பாக சொந்த மண்ணில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தது. இதையடுத்து எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் டி20 அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அணியின் கேப்டனாக சல்மான் அலி ஆகாவும், துணைக்கேப்டனாக ஷதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நட்சத்திர வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாகீன் அப்ரிடி போன்ற முன்னாள் கேப்டன்கள் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து டி20 தொடரை இழந்தாலும், வங்கதேசத்துடனான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
மேலும், அவரது கேப்டன்சி தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளரை கவர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று அணிகளுக்கும் சல்மான ஆகா கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.