முல்லை பெரியாறு அணையில் துணைக்குழுவினரின் ஆய்வை தமிழக அதிகாரிகள் புறக்கணிப்பு

8 months ago 31

கூடலூர்: முல்லை பெரியாறு அணைக்கு ஒன்றிய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் தலைமையிலான துணை குழுவினர் ஆய்வுக்காக நேற்று சென்றனர். அப்போது மேற்பார்வை குழுவின் கலந்தாய்வு கூட்டத்தில் கூறப்பட்ட உத்தரவுகளை, கேரள பொதுப்பணித்துறையினர் கடைபிடிக்கவில்லை; பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு கேரள தரப்பிலிருந்து அனுமதி வழங்குவதில் காலம் தாழ்த்துகின்றனர் எனக் கூறி தமிழக அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆய்வை புறக்கணித்தனர். இதையடுத்து அணையை ஆய்வு செய்யாமல் கேரள அதிகாரிகளும் கிளம்பிச் சென்றனர்.

இதுகுறித்து தமிழக அதிகாரிகள் கூறுகையில், 13 பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி வழங்காதது குறித்து, கேரள அதிகாரிகளிடம் கேட்டும் தரவில்லை. கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்காத நிலையில், அணையை ஆய்வு செய்வது சரியல்ல என துணைக்குழு தலைவரிடம் தெரிவித்து விட்டு ஆய்வுப்பணியை புறக்கணித்தோம் என்றனர். இதனிடையே அணை ஆய்வுக்கு வந்த துணைக்குழுவினரை சந்தித்து மனு அளிக்க வந்த பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினரை கூடலூர் அருகே லோயர்கேம்ப் சோதனைச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்திவிட்டனர்.

The post முல்லை பெரியாறு அணையில் துணைக்குழுவினரின் ஆய்வை தமிழக அதிகாரிகள் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article