சென்னை: முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவுபடுத்தியதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் இந்து சமய நம்பிக்கை உள்ள மக்களை பாஜ தனது அரசியல் சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் சதியில் ஈடுபட்டுள்ளதை அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பேசப்பட்ட கருத்துகள் மூலம் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி மற்றும் பாஜவும் முருகனுக்கு ஆபத்து என்ற பிம்பத்தைக் கட்டமைக்க விழைவதை தமிழ்மக்கள் புறந்தள்ளுவார்கள்.
முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிட கருத்தியலுக்கு எதிராகவும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை இழிவுபடுத்தியும் காணொலி காட்சிகள் இடம் பெற்றிருந்தது கடும் கண்டனத்துக்குரியது. இந்த மாநாட்டில் அறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்று இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்ததை நியாயப்படுத்தவே முடியாது. மதத்தையும், அரசியலையும் இணைப்பதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. மதம் சார்ந்த செயல்பாடுகள் எப்போதும் தேர்தலில் எதிரொலித்தது இல்லை.
The post முருகன் பெயரால் நடந்த பச்சை அரசியல் பெரியார், அண்ணாவை மாநாட்டில் இழிவுப்படுத்துவதா? வைகோ கண்டனம் appeared first on Dinakaran.