சென்னை: "முருக பக்தர்கள் விழிப்புணர்வு பெற்று மாநாடு நடத்துகிறார்கள் என்றவுடன் அதற்கு அரசியல் சாயம் பூசி, திசை திருப்பி இந்துக்களை குழப்ப காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சி தலைவர்கள் முயல்கிறார்கள். இவர்களின் கருத்துக்களால் இந்துக்களிடையே மிகுந்த எழுச்சி ஏற்பட்டு வருவதை கண்கூடாகக் காண முடிகிறது" என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்ரமணியம் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து முன்னணி ஜூன் 22-ல் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறது. மாநாட்டில் லட்சக்கணக்கானோர் ஒன்றினைந்து கந்த சஷ்டி கவசம் படிக்க இருக்கிறார்கள். முருகபக்தர்கள் கந்த சஷ்டி கவசம் படித்து மாநாடு நடத்துவது இந்து விரோத காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்றோருக்கு அரசியல் மாநாடாகத் தெரிகிறது.