
மும்பை,
மும்பையை சேர்ந்த பன்னாட்டு மருந்து கம்பெனியின் தலைவரும், இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவருமான லீனா காந்தி திவாரி, மும்பையில் மிகவும் மதிப்பு மிக்க வொர்லியில் நமன் சனாவில் 40 அடுக்கு மாடிகளை கொண்ட குடியிருப்பில் 2 வீடுகளை வாங்கியுள்ளார். அதன் விலை ரூ.639 கோடியாகும்.
அரபிக்கடலை பார்க்கும் வகையில் அமைந்துள்ள அந்த பிளாட்டுகள் 22,572 சதுர அடி கொண்டது. சதுர அடிக்கு ரூ.2.83 லட்சம் விலையாக கொடுத்து அந்த வீடுகளை அவர் வாங்கியுள்ளார். இதற்காக அவர் ஜி.எஸ்.டி.யாக மட்டும் ரூ.63.9 கோடி செலுத்தியுள்ளார் என பத்திரப்பதிவு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அவர் வாங்கிய 2 வீடுகளின் மொத்த மதிப்பு ரூ.703 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. கோடிகளை கொட்டி வீடு வாங்கிய பெண் தொழில் அதிபர் லீனா காந்தி திவாரி, பிரபல இந்திப்பட நடிகை ஜூகிசாவ்லாவின் நெருங்கிய தோழியாவார். சமீபத்தில் கோடாக் மஹிந்த்ரா வங்கியின் நிறுவனர் உதய் கோடாக், மும்பை வொர்லி நமன் சனாவில் ரூ.400 கோடிக்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.