
மும்பை,
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 23-ந்தேதி இரவு பாங்காங்கில் இருந்து வந்த விமானம் ஒன்று தரை இறங்கியது. இந்த விமானத்தில் வந்த ஒரு பயணியை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அவரது உடைமைகளில் இருந்த பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 5 கிலோ 500 கிராம் எடையுள்ள உயர்ரக கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 கோடியே 50 லட்சம் ஆகும்.
இதையடுத்து கஞ்சா கடத்தி வந்த பயணியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பிடிபட்ட பயணி பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த குர்விந்தர் சிங் (வயது30) என்பதும், கமிஷன் அடிப்படையில் கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து குர்விந்தர் சிங்கை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.