
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து விமானம் ஒன்று வந்தடைந்தது. அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த விமானத்தில் சந்தேகத்திற்கிடமான நிலையில் நடந்து கொண்ட பயணி ஒருவரை, சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அந்த பயணியின் உடமைகளை பரிசோதித்தனர். அதில், 48 விஷ பாம்புகள் மற்றும் 5 ஆமைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து தகவலறிந்த வனவிலங்கு நல சங்க குழுவினர் உதவியுடன் விஷ பாம்புகளின் இனங்கள் அடையாளம் காணப்பட்டது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின்படி, ஊர்வனவற்றை அவை கொண்டு வரப்பட்ட நாட்டிற்குத் திருப்பி அனுப்ப வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.