
மும்பை,
மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் 17 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வந்தார். சிறுமி மேற்கு புறநகர் பகுதியில் உள்ள சர்வதேச பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவி தான் வசிக்கும் கட்டிடத்தின் 45-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் நேற்று முன்தினம் நடந்துள்ளது.
தகவல் அறிந்து சென்ற போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் புத்தகப்பையில் இருந்து அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர், "எனது சாவுக்கு யாரும் காரணமில்லை. இது நானாக எடுத்த முடிவு" எனக்கூறி உள்ளார்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி கடந்த சில ஆண்டுகளாக மனஅழுத்த பிரச்சினையில் இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஒரு முறை சிகிச்சைக்கு சென்றபோது டாக்டரிடம் மாணவி, "எல்லோரும் ஒரு நாள் சாகத்தான் போகிறோம். பின்னர் ஏன் உயிர் வாழ வேண்டும்?" என கேட்டதாக அவரது தந்தை போலீசாரிடம் கூறியுள்ளார். ஆரே காலனி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.