முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

4 hours ago 3

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

விளையாட்டுத் துறையில் சர்வதேச/ தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6,000 வீதம் வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதி வாய்ந்தவர்கள்:

தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். தற்போது நலிந்த நிலையில் (வருமானம் குறைந்து, வேலை இல்லாத நிலை போன்றவை) இருப்பது. அரசு/தனியார் நிறுவனங்கள் அல்லது மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் (Veteran/ Masters Sports Meet) வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.

தகுதிகள்:

சர்வதேச/ தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருத்தல், சர்வதேச/ தேசிய போட்டிகளில் முதலிடம்/ இரண்டாமிடம் /மூன்றாமிடம் இடங்களில் வெற்றி பெற்று இருத்தல் வேண்டும்.

தகுதியான விளையாட்டுப் போட்டிகள்:

மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச/ தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம்/ இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச/ தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்.

வயது வரம்பு:

2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் (30.4.2025) அன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

மாத வருமானம்:

விண்ணப்பதாரரின் மாதவருமானம் ரூ.6,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். (இதற்கான 2025-ம் ஆண்டு பெறப்பட்ட வருமானச் சான்றினை சமர்ப்பித்திட வேண்டும்).

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பபடிவம் கிடைக்கும் மற்றும் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் அலுவலக வேலை நேரத்தில் நேரில் சென்று விண்ணப்பப் படிவம் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களை இணைத்து, தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் அலுவலக வேலை நேரத்தில் நேரில் சமர்ப்பித்திட வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

விளையாட்டு சாதனைகளுக்கான சான்றிதழ்கள், வயது மற்றும் அடையாளச் சான்றிதழ் (ஆதார்), பிறப்பிடச் சான்று (2025-ம் ஆண்டு பெற்று இருக்க வேண்டும்), வருமானச்சான்று (2025-ம் ஆண்டு பெற்று இருக்க வேண்டும்), ஓய்வு பெற்றதற்கான விவரங்கள் (தொழில்/ விளையாட்டு சார்ந்த).

முக்கிய குறிப்பு:

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களை இணைத்து தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் மட்டுமே வழங்கிட வேண்டும். சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வரவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பிடத் தேவையில்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் 31.7.2025 வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய ஆவணங்களுடன் இணைத்து 31.7.2025 மாலை 5 மணிக்குள் விண்ணப்பதாரர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்திட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read Entire Article