
கராச்சி,
சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் முதல் அணியாக நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது.
இதனையடுத்து கராச்சியில் நேற்று நடந்த கடைசி லீக்கில் பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 87 ரன்களும், மேத்யூ பிரெட்ஸ்கி 83 ரன்களும் கேப்டன் பவுமா 82 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 353 ரன் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கேப்டன் ரிஸ்வான் - ஆஹா சல்மான் இருவரும் சிறப்பாக விளையாடி சதமடித்து அணியை வெற்றி பெற வைத்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் 49 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 355 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. கேப்டன் முகமது ரிஸ்வான் 122 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். சல்மான் ஆஹா 134 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரு லீக்கிலும் தோற்ற தென் ஆப்பிரிக்கா வெளியேறியது. நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.