முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட முத்தான திட்டங்கள் மூலம் முத்திரை பதிக்கும் தமிழ்நாடு

2 months ago 8


சென்னை: தமிழக முதல்வராக கடந்த 2021 மே 7ம் தேதி ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பின், ‘இந்த ஆட்சி அமைய வாக்களித்தவர்கள் பெருமையடையும் வகையிலும், வாக்களிக்காதவர்கள், வாக்களிக்காமல் போய்விட்டோமே என்று வருந்தும் வகையிலும் எல்லோருக்கும் பயன்தரும் வகையில் சிறப்பாக செயல்படும் என கூறினார்.

அதேபோல், ஆளுநர் மாளிகையில் ஆட்சி பொறுப்பேற்று கோட்டையில் வந்து முதல்வர் இருக்கையில் அமர்ந்தபின் முதல் கையெழுத்தாக 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி, அரசு போக்குவரத்து துறையின்கீழ் நடைபெறும் நகர பேருந்துகளில் மகளிர், மாணவியர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் அனைவருக்கும் கட்டணமில்லா விடியல் பயணம்; கொரோனா தொற்று பரவல் காரணமாக வருவாய் இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.4 ஆயிரம் என வழங்கி ஆணையிட்டார். வாக்களித்த மக்களும், வாக்களிக்காதவர்களும் பயன்பெற்று மகிழ்ந்து முதல்வரை வாழ்த்தி பாராட்டினர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றபோதே உலகெங்கும் உயிர்ப்பலி வாங்கி கொண்டிருந்த கொரோனா தமிழ்நாட்டிலும் பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் கொரோனா தொற்றில் மாண்டு மடிந்தனர். கொரோனாவை கட்டுப்படுத்திட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தி ஆலோசனைகள் பெற்று தடுப்பூசிகள் தாராளமாக கிடைத்திட தேவையான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டார்.

கொரோனா நோய் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு, போக்குவரத்துகள் கடைகள் ரத்து, தொழிற்சாலைகள் மூடல், ஆலயங்களும் மூடல். 100 ஆண்டுகளுக்கு மேலாக உலகம் காணாத அவலம் தொடர்ந்து கொண்டிருந்தது. மனிதர்களிடம் உயிரச்சம் ஆட்டிப்படைத்தது. ஒருவரை ஒருவர் சந்திப்பதுகூட குறைந்தது; மருத்துவர்கள்கூட தொட்டு மருத்துவம் செய்வதை நிறுத்தினர்; மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தவர்களும் அச்சத்தில் உறைந்தனர்-தவித்துக் கொண்டிருந்தனர்.

அந்த நிலையில், கிஞ்சித்தும் அஞ்சாத திராவிட நாயகர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை சென்றார். அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் தங்கியிருந்த வார்டுக்குள் சென்றார். அதிகாரிகள் அனைவரும் தடுத்தனர். அதைச் செவிமடுக்காமல், “என் மக்களைக் காப்பதுதான் என் முதல் வேலை” என்று கூறி மருத்துவமனைக்குள் கவச உடையோடு சென்று கொரோனா தொற்று நோயாளிகளைப் பார்த்து, “அச்சப்படாதீர்கள்; நான் இருக்கிறேன்” என்று தைரியமூட்டினார்.

அதனை தொடர்ந்து டாக்டர்கள் உள்பட மருத்துவ பணியாளர்கள் அனைவரும் ஊக்கமடைந்து பணிபுரிய தொடங்கினர். அவர்களெல்லாம் முன்கள பணியாளர்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து, அவர்களுக்கு அரசின் சிறப்புச் சலுகைகளை வழங்கினார்.இதுமட்டுமல்லாது, முதல்வரின் செயல் வேகத்தால் அரசு பணிகள் தொய்வின்றி தொடர்ந்தன. பத்திரிகைகளும் ஊடகங்களும் பாராட்டின. மற்ற மாநிலங்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்கள் புயல் வேகம் கொண்டு தமிழகத்தை பாதுகாக்கின்றன எனக்கூறி. “இந்தியாவின் சிறந்த முதல்வர்” என பாராட்டின.

அப்பொழுது கூட “சிறந்த முதலமைச்சர் என நான் பாராட்டப்படுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்காது; என் தமிழ்நாடு இந்தியாவின் நம்பர் 1 சிறந்த மாநிலம் எனப் புகழ்பெறும்போதுதான் நான் மகிழ்வேன்” என்றார். சொல்லியவாறே தமிழ்நாட்டை இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் என உயர்த்திட புதியபுதிய திட்டங்களை செயல்படுத்தினார். தமிழ்நாடு நலம்பெற்றது; வளம் பெறத் தொடங்கியது.

* விடியல் பயணத்திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், முதல்வரின் காலை உணவு திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம், தாழ்த்தப்பட்டவர்களை தொழில் முனைவர் ஆக்கிடும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், மக்கள் கோரிக்கைகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் தீர்க்க முதல்வரின் முகவரி திட்டம், தொழில் வளர்ச்சிக்காக உலக நாடுகளில் பயணங்கள் மேற்கொண்டு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் தொழில் முதலீடுகளை ஈர்த்து; 31 லட்சத்துக்கு மேலான வேலை வாய்ப்புகளுக்கு வழி வகுத்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், புதிய சிப்காட் தொழில் வளாகங்கள், புதியபுதிய தொழிற்சாலைகள்

* தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மினி டைடல் பூங்காக்கள், மகளிர் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடன் வழங்கி தொழில் முதலாளிகளாக ஆக்குதல், அனைத்து சாதியாரும் அர்ச்சகர் சட்ட நடைமுறையைச் செயல்படுத்தி திருக்கோயில்களில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுடன் மகளிரை ஓதுவார்களாக நியமித்தல், அரசுத் துறைகளிலும், தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்புகளை பெருக்கி வருதல் முதலான பல திட்டங்களால் முதல்வர் எண்ணியபடியே இன்று தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த மாநிலம் என புகழ் படைத்துள்ளது. இவற்றையொல்லாம், ஒன்றிய அரசின் துறைகள் ஒவ்வொன்றும் தமிழக அரசையும், முதல்வரையும் பாராட்டுகின்றன. அதேபோல், ஒன்றிய நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் அளித்த பொருளாதார ஆய்வறிக்கையும் பாராட்டியது.

காலை உணவு திட்டத்தின் சிறப்புகளை கேட்ட தெலங்கானா மாநில அதிகாரிகள் சென்னை வந்து அதன் செயலாக்க முறைகளை பார்வையிட்டு பாராட்டியத்துடன் இத்திட்டத்தை தங்கள் மாநிலத்திலும் செயல்படுத்தினர். இந்தியாவில் வேறு பல மாநிலங்களும் இத்திட்டத்தை ஏற்று செயல்படுத்துகின்றன. இந்தியா கடந்து இத்திட்டம் கனடா அரசினால் பாராட்டப்பட்டு, அங்கும் செயல்படுத்தப்படுகிறது. தற்போது, இங்கிலாந்து நாடும் இத்திட்டத்தினை அடுத்த மாதம் தொடங்கி தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்திட முனைந்துள்ளது.

இத்திட்டம் மட்டுமல்லாமல், மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நம் நாட்டின் பல மாநிலங்கள் புதுச்சேரி, கர்நாடகா, உத்தரகாண்ட் முதலிய பல மாநிலங்கள் ஏற்றுப் பின்பற்ற முனைந்துள்ளன. அண்மையில், டெல்லி மாநில தேர்தலின் போது பா.ஜ. டெல்லியில் தம் ஆட்சி அமைந்ததும் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவித்தது.

அதேபோல், அமெரிக்க நாட்டு நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் அவை முதல்வரின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை போற்றி புகழ்ந்து பாராட்டியது. இதுபோல், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிந்தையில் பூத்த செம்மலர் திட்டங்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் அவனி எங்கும் மணம் பரப்பி புகழை குவிக்கின்றன. மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சித் திறனால் தமிழ்நாடு பெற்றுள்ள பெருமைகளை பல்வேறு அமைப்புகள் பாராட்டி வருவது தொடர் நிகழ்வுகளாகின்றன.

இந்தியா டுடே, சி வோட்டர் கருத்துக்கணிப்புகள் கடந்த 13ம் தேதி ஊடகங்களில் வெளியிடப்பட்டன. சி வோட்டர் நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான யஷ்வந்த் தேஷ்முக் கருத்து கணிப்புகளை வெளியிட்டுப் பேட்டி அளித்தபோது, “தற்போதைய சூழலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரபலமான தலைவராக இருக்கிறார். சிறந்த முதலமைச்சர்களின் பட்டியலில் அவர் தொடர்ச்சியாக சிறந்த முதலமைச்சராக திகழ்கிறார். இது சாதாரணமானதல்ல. திராவிட அரசியல் – தேசியவாத அரசியல் ஆகியவற்றை தி.மு.க. மிக அழகாகக் கையாண்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்’’ என்று பாராட்டியுள்ளது.

அதேபோல், தமிழ்நாடு இந்திய நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் புதிய திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி, முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இத்தகைய திட்டங்களால், மக்களின் முழு ஆதரவையும் பெற்றுச் சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். ஒன்றிய அரசின் நிதி ஆயோக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அவ்வப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒப்பற்ற தலைமையில் தமிழ்நாடு அடைந்துவரும் முன்னேற்றங்களையும் சாதனைகளையும் குறிப்பிட்டுப் பாராட்டி வருகின்றன.

* ஐநா அமைப்பின் 2024 ஆண்டுக்கான சர்வதேச பணி முனைப்பு குழு விருது

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இந்திய துணை கண்டத்துக்கே முன்னோடி திட்டமாக பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று மருத்துவச் சேவைகள் அளித்து வரும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு 2024ம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் 79வது பொதுச்சபையில் சர்வதேச பணிமுனைப்பு குழு விருது அறிவிக்கப்பட்டது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஓய்விலா உழைப்பிற்கு இது ஓர் உலக அங்கீகாரம், அவரது அற்புதமான ஆற்றல்களால் தினந்தோறும் புகழும் பெருமைகளும் திரும்பிய திசையெல்லாம் முழங்குகின்றன.

* ஒன்றிய அரசின் நிதிஆயோக் அறிக்கை

2023-24ம் ஆண்டிற்கான, ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பு நீடித்த நிலையான வளர்ச்சி குறியீடுகள் குறித்த 4வது ஆய்வறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், தமிழக அரசின் தொலைநோக்கு சிந்தனைகளுடன் செயல்படுத்தி வரும் சீரிய திட்டங்களால் வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுச் சிறந்த மாநிலமாக திகழ்கிறது என்று கூறி பாராட்டியது. அதே அறிக்கையில், காலநிலைமாற்றம், சுற்றுச் சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசிலா எரிசக்தி இரண்டிலும் சிறப்பாகச் செயலாற்றி தேசிய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இவை மட்டுமல்லாமல், பசிப்பிணி அகற்றல், பொருளாதாரம் மற்றும் சிறந்த வேலைவாய்ப்பு, தரமான கல்வி, மக்கள் நலம் மற்றும் சுகாதார வாழ்வு, தொழில் வளர்ச்சி – புத்தாக்கத் தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், தூய்மையான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல், சமத்துவமின்மையைக் குறைத்தல், உற்பத்தி மற்றும் நுகர்வு, அமைதியைக் காத்தல், நீதி நிர்வாகம், வலுவான நிறுவனங்கள், பாலின சமத்துவம் ஆகிய இனங்களில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உயர்ந்து சிறந்துள்ளது என்றும் பாராட்டியுள்ளது.

* இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை

இந்திய ரிசர்வ் வங்கியின் 2023 -24ம் ஆண்டிற்கான வளர்ச்சி குறித்த ஆய்வேட்டில் மனித வளங்களை வளர்ப்பதில் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களைவிட தமிழ்நாடு முன்னேற்றம் கண்டு இந்தியாவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது என்று பாராட்டப்பட்டது.

* தேசிய இறக்குமதி, ஏற்றுமதி ஆண்டாய்வு அறிக்கை

2022-23ம் ஆண்டிற்கான தேசிய இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தக ஆண்டாய்வு பதிவுகள் குறித்த அறிக்கையில், இந்திய அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகள் 16.19 பில்லியன் அமெரிக்க டாடலர் என்றும்; இதில், தமிழ்நாடு 5.30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்து இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது என்றும் அறிவித்து பாராட்டியது. அதேபோல, 2022-23ம் ஆண்டிற்கான தோல் பொருட்கள் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு 43.20 சதவீத தோல் பொருட்களை ஏற்றுமதி செய்து தோல் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் என்றும் பாராட்டப்பட்டது.

* ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை

நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் கடந்த ஜனவரி 31ம் தேதி 2024-25ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அது காலணிகள் உற்பத்தி தொழில், இல்லம் தேடி கல்வி திட்டம் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள சிறப்பான முயற்சிகளை வெளிப்படுத்தியுள்ளது. பாரம்பரிய தோல் பொருட்கள் தயாரிப்பு துறையில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்துவரும் சூழலில் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியிலும் தமிழ்நாடு சிறப்பான முன்னேற்றம் கண்டு வருகிறது.

தமிழ்நாடு இந்தியாவின் தோல் பொருட்கள் மற்றும் காலணிகள் உற்பத்தியில் 38 சதவீதம் பங்களிப்பையும் இந்தியாவின் மொத்த தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 47 சதவீதம் பங்களிப்பையும் தமிழ்நாடு வழங்கியுள்ளது. தோல் பொருட்கள் உற்பத்தி துறையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

* ஒன்றிய அரசின் நிர்யாத் ஆய்வறிக்கை

ஒன்றிய அரசின் நிர்யாத் நிறுவனம் ஜவுளி துணிகள் ஏற்றுமதி குறித்து 2022-23ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையில் தேசிய அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த ஜவுளித் துணிகளின் மதிப்பில் தமிழ்நாடு 4ல் ஒரு பங்கினை, அதாவது, 22.58% துணிகளை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது என்று பாராட்டியது.

* மாநில திட்டக்குழு அறிக்கை

முதல்வர் மு.க.ஸ்டாலின் முத்திரை திட்டங்களில் ஒன்று புதுமைப்பெண் திட்டம். அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படித்து உயர்கல்வியில் சேரும் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டத்தினால் கல்லூரிகளில் சேரும் மாணவியர் எண்ணிக்கை 34%அதிகரித்துள்ளது என மாநில திட்டக்குழு தனது ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளது. இதேபோல, அரசு பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தினாலும், கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

* இந்திய உயர்கல்வி நிறுவனத்தின் ஆய்வறிக்கை

அகில இந்திய உயர்கல்வி ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 49 சதவீதம் பெற்று இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. இது அகில இந்திய சராசரி சதவீதத்தை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் என்று குறிப்பிட்டு தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சியை பாராட்டியுள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவிலான அரசு பல்கலைக்கழகங்களை கொண்டுள்ளது தமிழ்நாடு; 500க்கும் மேற்பட்ட தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகளை கொண்டுள்ளது தமிழ்நாடு;

அதிக அளவிலான மருத்துவக் கல்லுரிகளைக் கொண்டுள்ளது தமிழ்நாடு; இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற 100 உயர்கல்வி நிறுவனங்களில் 31 உயர்கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளது தமிழ்நாடு; இவற்றின்மூலம் தரமான கல்வியினை மாணவர்களுக்கு வழங்குவதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது தமிழ்நாடு என்று கூறிப் பாராட்டியது.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட முத்தான திட்டங்கள் மூலம் முத்திரை பதிக்கும் தமிழ்நாடு appeared first on Dinakaran.

Read Entire Article