முதல் டெஸ்ட்: ரூட் செய்த தவறு.. இந்திய அணிக்கு 5 பெனால்டி ரன்கள்

4 hours ago 4

லீட்ஸ்,

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் ஜோடி வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தது. 24.5 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. கே.எல். ராகுல் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாய் சுதர்சன் டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.

பின்னர் ஜெய்ஸ்வாலுடன் - சுப்மன் கில் கை கோர்த்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு வலு சேர்த்தனர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் சதம் (101 ரன்கள்) அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனிடையே சுப்மன் கில் அரைசதம் கடந்தார். ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை தொடர்ந்து பண்ட் களமிறங்கியுள்ளார்.

முன்னதாக இந்த இன்னிங்சின் 51-வது ஓவரை இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை ஜெய்ஸ்வால் எதிர்கொண்டார். அந்த பந்து ஜெய்ஸ்வாலின் பேட்டில் பட்டு எட்ஜ் ஆகி ஸ்லீப் பகுதிக்கு சென்றது. அதனை 2-வது ஸ்லீப் பகுதியில் நின்றிருந்த ஜோ ரூட் பிடிக்க முற்பட்டார்.

இருப்பினும் பந்து அதற்கு முன்பு தரையில் பிட்ச் ஆகி அவரின் கையில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் கழற்றி வைத்திருந்த ஹெல்மெட்டில் பட்டது. இதனால் இந்திய அணிக்கு ஐ.சி.சி. விதிப்படி 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்பட்டது. இப்படி ரூட் தெரியாமல் செய்த தவறினால் இந்திய அணிக்கு 5 ரன்கள் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

Read Entire Article