நன்றி குங்குமம் தோழி
நமக்கு எளிதாக கிடைக்கும் எதுவுமே கடைக்கோடி கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு எளிதாக கிடைப்பதில்லை. அவர்களின் அன்றாடத் தேவையினை பூர்த்தி செய்ய தினமும் வேலைக்குப் போக வேண்டும் என்ற நிலைமையில்தான் இன்றும் பல கிராமங்கள் இருக்கிறது. அப்படிப்பட்ட மக்கள் வாழும் ஊர்தான் கோவையில் உள்ள ஆனைகட்டி கிராமம். தொழில் நகரமான கோவையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கும் அதே வேளையில் ஆனைகட்டி கிராமத்தில் உள்ள பெண்கள் இப்போதுதான் முதன் முதலாக வாகன ஓட்டுநருக்கான உரிமம் பெற்றிருக்கிறார்கள்.
பலரும் சொந்தக் கார் வைத்திருக்கும் நிலையில் ஓட்டுநர் உரிமமே இப்போதுதான் வாங்கியிருக்கிறார்கள் என்றால் அவர்களின் வாழ்வாதாரம் எப்படி இருக்கும் என்பதை இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். செல்வி என்பவர் ஆனைகட்டி பகுதி யில் உள்ள 10 கிராமங்களில் முதன் முதலாக ஆட்டோ ஓட்டுவதற்காக ஓட்டுநர் உரிமம் வாங்கியிருக்கிறார்.
‘‘நாங்க கோவையில் உள்ள சின்னஜம்புகண்டி கிராமத்தை சேர்ந்தவங்க. எங்க கிராமத்தை சுற்றி கிடைக்கும் சின்னச் சின்ன வேலைகளைதான் நாங்க செய்து வந்தோம். என் கணவர் ஒரு வருடத்திற்கு முன் இறந்துட்டார். நான் மட்டுமே என் குடும்பத்தை வழிநடத்த வேண்டிய சூழ்நிலை. நாங்க பார்த்து வந்த வேலைகளும் நிரந்தரமானது இல்லை. அவ்வப்போது கிடைக்கும் வேலைகளைதான் செய்து வந்தேன். அந்த சமயத்தில் நான் பக்கத்தில் உள்ள தோட்டத்து வேலைதான் செய்து வந்தேன். நான் மட்டுமில்லை எங்க கிராமத்தில் இருக்கும் பல பெண்களும் இங்கு தான் வேலை பார்த்து வந்தாங்க.
எங்க ஊருக்கு அருகிலுள்ள ஆதிவாசி பெண்களின் மேம்பாட்டிற்காக சவுந்தரராஜன் என்பவர் பல வேலைகளை செய்து வந்தார். அவர் பழங்குடிப் பெண்களுக்கு கைத்தொழில் சொல்லிக் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி வந்தார். இது பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து நானும் மல்லிகா என்பவரும் அவரின் மையத்தில் வேலைக்கு சேர்ந்தோம். எங்களுக்கு தெரிந்த தோட்டத்து வேலைக்கே எங்களை தேர்வு செய்தார். தோட்டத்து வேலைகள் பார்த்தாலும், மற்ற வேலைகளையும் ஆர்வமாக செய்வோம். குறிப்பா அங்க தயாரிக்கும் உணவுப் பொருட்கள் குறித்த வேலை.
சவுந்தரராஜன் அந்தக் கிராம மக்களுக்காக பல நன்மைகளை செய்து வந்தார். அதில் தினமும் அருகிலுள்ள பள்ளிக்கூட மாணவர்களுக்கு ஊட்டச்சத்து வேண்டும் என்பதால் இலவசமாக தினமும் கூழ் கொடுத்து வந்தார். மையத்தில் கூழினை தயாரித்து அதற்காக தனி வண்டிகள் வைத்துதான் பள்ளியில் கொண்டு போய் கொடுப்பாங்க. ஒருநாள் எங்களை அழைத்தவர், ஆட்டோ வாங்க இருப்பதாகவும், அதை யாராவது ஓட்டப் பழகினால் உதவியாக இருக்கும்னு சொன்னார். அவர் அப்படி சொன்னதும் நானும் மல்லிகாவும் ஒரு வேகத்தில் சரின்னு சொல்லிட்டோம். ஆனா, எங்களுக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது.
எப்படியாவது கற்றுக்கொள்ளலாம். அதன் மூலம் ஒரு முன்னேற்றம் கிடைக்கும்னு நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. எங்களுக்கு வாகனம் ஓட்டத் தெரியாது என்பதை புரிந்துகொண்ட சவுந்தரராஜன் அதற்கான பயிற்சி பள்ளியில் சேர்த்துவிட்டார். ஒரு மாதம் அங்கு கார் ஓட்டப் பழகினோம். அதன் பிறகு ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பிக்கும் போது தான் தெரிந்தது நாங்கள்தான் ஆனைகட்டி பகுதியில் உள்ள 10 கிராமங்களில் முதன் முதலாக நான்கு சக்கர ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கிறோம் என்று.
ஆனைகட்டி பகுதிகளில் இருக்கக்கூடிய பல ஊர்களில் இரு சக்கர வாகனங்கள் இருக்கு. ஆனால் நான்கு சக்கர வாகனங்கள் யாரிடமும் இல்லை என்பதால் அதற்கான ஓட்டுநர் உரிமம் யாரும் பெறவில்லை. ஆண்களிடமே இல்லாத போது, பெண்களான நாங்கதான் முதன் முதலில் வண்டி ஓட்டப் பழகி ஓட்டுநர் உரிமமும் வாங்கியிருக்கிறோம். ஓட்டுநர் உரிமம் வந்ததுமே எங்களுக்கு இரண்டு எலக்ட்ரிக்கல் ஆட்டோக்களை வாங்கிக் கொடுத்தார்.
அதை சில நாட்கள் ஓட்டிப் பழகினோம். இப்போது இந்த ஆட்டோக்களை கொண்டு, அமைப்பிற்குத் தேவையான பொருட்களை வாங்கவும், பள்ளிக்கூட குழந்தைகளுக்கு கூழ் கொடுக்கிறோம். நாங்க ஆட்டோ ஓட்டுவதை பலரும் வியந்து பார்த்தாங்க. பெண்களால் எதுவும் பண்ண முடியும்னு சவுந்தரராஜன் சார் சொல்வார். அதற்கான உதாரணம் நாங்கதான்’’ என்று மகிழ்ச்சியாக சொல்கிறார் செல்வி.
இந்தப் பகுதி பெண்களுக்கென பல வேலைகளை சொல்லிக் கொடுத்து அவர்களை தொழில்முனைவோர்களாக மாற்றி வருகிறார் சவுந்தரராஜன். இது குறித்து அவரிடம் பேசும் போது, ‘‘எனக்கு பழங்குடி மக்களை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு தொழில் சொல்லிக் கொடுத்து அவர்களை தனித்து நிற்க வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் ஆதிவாசிப் பெண்களுக்கான வாழ்வாதார மையத்தை தொடங்கினேன். இங்கு பழங்குடி பெண்களே செய்யக்கூடிய கைவினைப் பொருட்கள், உணவுப் பொருட்கள் என அனைத்தும் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து தயாரிக்க வைத்திருக்கிறேன்.
இந்தப் பொருட்களை நகரங்களில் உள்ள கடைகளில் விற்பனை செய்கிறோம். அதற்காக இரண்டு ஆட்டோக்களை ஒருவர் ஸ்பான்சர் செய்தார். அதை ஓட்ட கேட்ட போது மல்லிகா, பூங்கொடி, செல்வி மூவரும் ஆர்வத்தோடு முன் வந்தனர். அவர்களுக்கு வண்டி ஓட்ட சொல்லி கொடுத்து ஆட்டோக்களையும் கொடுத்திருக்கிறேன். எங்களின் தயாரிப்புகளை கொண்டு செல்வது மட்டுமில்லாமல் மற்றவர்கள் அழைத்தாலும் அவர்களை ஏற்றி இறக்கி வருகிறார்கள்.
இந்தப் பகுதியில் பல வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறேன். அதில் ஒன்றுதான் இந்த ஓட்டுநர் உரிமமும். நாங்கள் விண்ணப்பிக்கும் வரை இவர்கள்தான் முதன் முதலில் ஓட்டுநர் உரிமம் வாங்கப் போகிறார்கள் என்று தெரியாது. இந்த பழங்குடி கிராமங்கள் எவ்வளவு பின்தங்கியிருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு முன்னுதாரணம்’’ என்கிறார் சவுந்தரராஜன்.
தொகுப்பு: மா.வினோத்குமார்
The post முதல் ஓட்டுநர் உரிமம் பெற்ற பழங்குடியினப் பெண்கள்! appeared first on Dinakaran.