
சென்னை,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்திருந்தார். அதில் தமிழகத்தில் கூட்டணி அரசு அமைக்கப்படுமா..? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும், அதில் பா.ஜனதா கட்சியின் பங்கு இருக்கும். தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். முதல்-அமைச்சர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார்" என்று அமித்ஷா கூறி இருந்தார்.
அடுத்ததாக, நீங்கள் அ.தி. மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க முயற்சி செய்கிறீர்கள்? என்று கூறப்படுகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "நான் யாரையும் ஒன்றிணைக்கவில்லை. அது அவர்களது கட்சி குறித்த விஷயம். அவர்கள் தாங்களாகவே முடிவு எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்
தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சி குறித்து நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, "என் நம்பிக்கை என்னவென்றால், அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா. அதாவது தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலுவான நிலையில் இருக்கிறது" என்று அமித்ஷா பதில் அளித்திருந்தார்.
முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பெயரை கூறாமல், அதிமுக தலைமையின் கீழ் தாங்கள் போட்டியிடுவதால், அக்கட்சியை சேர்ந்தவர்களே முதல்-அமைச்சர் ஆவார்கள் என்று தெரிவித்திருந்தநிலையில், தற்போது அது விவாத பொருளாக மாறி உள்ளது.
இந்நிலையில் அமித்ஷா கூறியதுபோல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதுதொடர்பாகசெய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நயினார் நாகேந்திரன், "தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள். 2026 சட்ட சபை தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்.. எங்கள் கூட்டணியை எந்தக் காலத்திலும் அவர்கள் பிளவுப்படுத்த முடியாது.
பாஜக - அதிமுக கூட்டணியை அமித்ஷா அறிவித்ததில் இருந்தே திமுகவினர் பயத்தில் என்னென்னவோ பேசி வருகின்றனர். கூட்டணி ஆட்சியை பொறுத்தவரையில் அமித்ஷாவும் இபிஎஸ்-ம் பேசிக் கொள்வார்கள்" என்று அவர் கூறினார்.
இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க இணையுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் "நல்லதே நடக்கும்" என்று நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.