
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
துணைவேந்தர்கள் நியமனம் குறித்த பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைவு விதிகள் தொடர்பான விவகாரத்தில் மாநில உரிமைகளைக் காக்க வேண்டும் என்பதற்காக பாஜக ஆட்சி நடக்காத மாநிலங்களின் முதல்-மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது நல்ல முயற்சிதான். பாட்டாளி மக்கள் கட்சியும் அதைத் தான் வலியுறுத்தி வருகிறது.
அதேவேளையில், சமூகநீதியைக் காப்பதற்காக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் விவகாரத்தில் தமிழக அரசின் உரிமைகளை அப்பட்டமாக தாரை வார்த்துக் கொண்டிருக்கிறாரே, அந்த விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை எவ்வாறு காப்பது என்பது குறித்து இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்துள்ள பிகார், கர்நாடகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகளுக்கு கடிதம் எழுதியாவது கேட்டறிவாரா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்?.. மாநில உரிமைகளைக் காப்பதில் யு.ஜி.சி விதிகளில் ஒரு வேடம், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் இன்னொரு வேடமா?. எப்போது கலையும் இந்த இரட்டை வேடம்?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.