முதலாமாண்டு கல்வி செல்லும் மாணவர்களுக்கு வரும் 17ம் தேதி கல்வி உதவித்தொகை வழங்கும் விழா: 7000 பேருக்கு வழங்க திட்டம், அமைச்சர் சேகர்பாபு தகவல்

11 hours ago 4

சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், கல்லூரி முதலாமாண்டு சென்ற மாணவர்கள் ஆகியோருக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா ஜூன் 17ம் தேதி நடத்தப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.  சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் 2025-26ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வில் சாதித்த பத்திரிகையாளர் பிள்ளைகளுக்கு ஊக்க தொகை மற்றும் பரிசளிக்கும் விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பத்திரிகையாளர்களின் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளை சிறப்பிக்கு இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஊக்கத்தொகைகளை வழங்கியமைக்கு மகிழ்ச்சியடைகிறேன். குழந்தைகள் கல்வி பயில்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்குங்கள் ஜனநாயகத்தின் நான்காம் தூணாக இருக்கும் உங்களுக்கு அரசு நிச்சயம் உறுதுணையாக இருக்கும்.

இந்திய துணை கண்டத்திலேயே படைப்பகம் என்ற படிக்கும் பிள்ளைகள் பயன்பெறும் வகையில் முதல்வர் உருவாக்கி இருக்கிறார்.  அந்த படைப்பகத்தில் தினசரி 200க்கும் குறையாமல் மாணவ செல்வங்கள் வருகின்றனர். குறைந்த அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டு 5000க்கும் மேற்பட்ட புத்தகங்களை அந்த படைப்பகத்தில் படிக்கலாம். கடந்த 6 மாதத்தில் படைப்பகம் மூலம் படித்து 15 பேர் தேர்வடைந்துள்ளனர். உங்களுக்கும் அதுபோன்ற வசதியை செய்து தர தயாராக இருக்கிறோம்.

10 மற்றும் 12 மாணவர்களுக்கு மாநகராட்சியுடன் இணைந்து ஒரு பயிற்சி மையம் போல அமைத்து எந்த பாடப்பிரிவில் மாணவர்களுக்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறதோ அதற்கான ஆசிரியர்களை நியமித்து பயிற்சியினை அளிக்கலாம். இதன் மூலம், மாணவர்களின் அடித்தளத்தை அமைக்கும் வாய்ப்பாக இவை அமையும். இதற்கு கட்டாயம் உறுதுணையாக இருப்போம். இந்தாண்டு 1500 உறுப்பினர்களில் 200 பேரை தேர்வு செய்யுங்கள் அவர்கள் கல்வி படிப்பை தொடர்வதற்கு தேவையான அளவிற்கு திமுக சார்பில் செய்து தருகிறோம்.

வரும் 17ம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை மேயர் பிரியா ஏற்பாடு செய்துள்ளார். இதில் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து முதலாண்டு கல்லூரி செல்பவர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை, லேப்டாப் மற்றும் உபகரணங்கள் வழங்க உள்ளோம்.

இதன் மூலம் 7000 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். மேலும் இந்தாண்டு பத்திரிகையாளர்களின் 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் குழந்தைகள் 200 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு கல்வி உதவி தொகைகள் வழங்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோம். குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

The post முதலாமாண்டு கல்வி செல்லும் மாணவர்களுக்கு வரும் 17ம் தேதி கல்வி உதவித்தொகை வழங்கும் விழா: 7000 பேருக்கு வழங்க திட்டம், அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article