முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துப் பதிவுக்கு நன்றி தெரிவித்த நடிகர் கமல்ஹாசன்!

1 day ago 3

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துப் பதிவுக்கு நடிகரும், மநீம கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நன்றி தெரிவித்து தனது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது பெறும் படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் இடம்பெறுமாறு நடிகர் கமல்ஹாசனுக்கு ஆஸ்கர் விருதுக் குழு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் கமல்ஹாசனுடன் நடிகர் ஆயுஷ்மான் குரானா, படத் தயாரிப்பாளர் கபாடியா, காஸ்டியூம் டிசைனர் மேக்சிமா பாசு, டாக்குமென்டரி இயக்குனர் ஸ்மிருதி முந்த்ரா, ஒளிப்பதிவாளர் ரன்பீர் தாஸ் ஆகியோருக்கும் ஆஸ்கர் நிர்வாகக் கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது.

98வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறும். நிகழ்ச்சியை கோனன் ஓ’பிரையன் தொகுத்து வழங்குகிறார். விருதுக்கான பரிந்துரைகள் ஜனவரி 22ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுருந்த வாழ்த்துப் பதிவில் தெரிவித்ததாவது; உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் – கலைஞானி கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்! மொழி – தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது! என்று பதிவிட்டுருந்தார். இதைத்தொடர்ந்து, தனக்கு வாழ்த்து தெரிவித்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் தனது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியதாவது; ஆஸ்கர் அமைப்பின் அழைப்பு ஒரு மகிழ்வென்றால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துச் சொற்கள் மேலும் மகிழ்வு. மிக்க நன்றி. என்று பதிவிட்டுள்ளார்.

 

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துப் பதிவுக்கு நன்றி தெரிவித்த நடிகர் கமல்ஹாசன்! appeared first on Dinakaran.

Read Entire Article