காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்து தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திலிருந்து வைப்பு தொகைக்கான ரசீது பெற்றுள்ள பெண் குழந்தைகளில், முதிர்வுத்தொகை கோரி விண்ணப்பிக்காத பெண் குழந்தைகளின் முதிர்வுத்தொகை, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திலிருந்து சமூக நல ஆணையரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அவ்வாறு, மாற்றப்பட்ட 3217 பயனாளிகளில், 1703 பயனாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கான முதிர்வுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 1514 பயனாளிகள் விண்ணப்பிக்கும்பொழுது அளித்துள்ள முகவரியில் தற்போது வசிக்கவில்லை. மேலும், பயனாளிகளின் தொலைபேசி எண் குறித்த தகவல்களும் இல்லாத காரணத்தால், உரிய பயனாளிகளுக்கு தகவல் தெரிவிப்பதில் சிரமம் உள்ளது.
மேற்படி, 18 வயது பூர்த்தியடைந்துள்ள பெண் குழந்தைகளின் விவரங்கள் அடங்கிய பட்டியல் https:/Kancheepuram.nic.in என்கிற வலைதளத்தில் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ள பயனாளிகள், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வைப்புத்தொகை ரசீது நகல், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், பெண் குழந்தையின் பெயரில் உள்ள வங்கி கணக்கு புத்தக நகல், பெண் குழந்தையின் ஆதார் அட்டை நகல், பிறப்பு சான்று நகல், குடும்ப அட்டை நகல், தாய் மற்றும் பெண் குழந்தையின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் (2 நகல்கள்) வயது முதிர்வுத் தொகைக்கான கருத்துருவினை மாவட்ட சமூகநல அலுவலகம் மற்றும் சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள விரிவாக்க அலுவலரிடம் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
The post முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பெண் குழந்தைகளின் விவரங்கள் வலைதளத்தில் பதிவேற்றம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.