
தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் 1,100 எண்ணிக்கையில் சிறிய மற்றும் பெரிய கோழிப் பண்ணைகள் இருக்கின்றன. இந்த கோழிப்பண்ணைகளில் சுமார் 8 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் கிடைக்கின்றன. இந்தியாவில் உற்பத்தியாகும் முட்டைகளில் 95 சதவீதம் நாமக்கல் மாவட்டத்தில்தான் பெறப்படுகிறது.
இங்கிருந்து பிற மாநிலங்களுக்கு மட்டும் அல்லாது, வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து ரூ.5.90 ஆக இருந்தது. இதனால், கடைகளில் ரூ.7-க்கு சில்லறை விலையில் முட்டை விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது ஆந்திராவில் பறவைக்காய்ச்சல் பரவி வருவதாலும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும் பொதுமக்களிடம் முட்டை நுகர்வு குறைந்துள்ளது. இதனால், முட்டைகள் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, நாமக்கல்லில் நேற்று கூடிய தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை 30 காசு குறைப்பது என்று முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது. இதனால், ரூ.4.90-ல் இருந்து ரூ.4.60 ஆக முட்டை விலை குறைந்தது. அதனைத் தொடர்ந்து, தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கடைகளில் முட்டை விலை குறைந்துள்ளது. ரூ.5 முதல் ரூ.5.50 வரை விற்பனை செய்யப்பட்டுவருகிறது.