முக்கிய தொகுதிகளை கூட்டணிக் கட்சிக்கு தாரைவார்க்க தயாராகியிருக்கும் இலைக்கட்சி தலைவர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

1 month ago 8

‘‘இலைக்கட்சி அழைக்காவிட்டாலும் அந்த கூட்டணியில் தான் இருப்போம் என்பதை முரசு கட்சி மேடம் சொல்லாமல் சொல்லி இருக்கிறதா கட்சியினர் பேசிக்கிறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியை விமர்சனம் செய்ய வேண்டாம் என மலராத தேசிய கட்சியின் புதிய தலைவர் நிபந்தனை போட்டதை அனைவரும் வழிமொழிகின்றனராம்.. அதாவது, மலையான தலைவர் மலராத கட்சியின் மாநில தலைவராக இருந்தபோது இலை கட்சி கூட்டணியில் இருந்தாலும் அந்த கட்சியின் தலைவர்களை வறுத்து எடுத்தார்.. அப்போதுதான் அரசியல் செய்ய முடியும்.. மலராத தேசிய கட்சியை வளர்க்க முடியும் என்பது அவரது கணக்கு. ஆனால் இலை கட்சி கூட்டணி உடைந்து போனதால் சுவரில் அடித்த பந்து போல மலையான தலைவரின் உத்தி அவருக்கு எதிராகவே திரும்பியது.. அதனால் அவரது தலைவர் பதவியும் பறிபோச்சு.. சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடக்க உள்ள நிலையில் மலராத கட்சியின் மாநில புதிய தலைவராக அல்வா ஊரின் எம்எல்ஏ, இலை கட்சியின் மீது தான் சவாரி செய்ய வேண்டும் என்பதால் தேர்தல் வரை இலைக்கட்சியை யாரும் தாக்கிப் பேச வேண்டாம் என கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டுள்ளார்.. இந்த உத்தரவை முரசு கட்சியின் மேடமும் ஆமோதித்தாராம்.. முத்து நகருக்கு வந்த அவர் அல்வா ஊரின் எம்எல்ஏ கூறியது சரிதான் என்பதுபோல் தெரிவித்து இருக்கிறாரு.. இலை கட்சி அழைக்கா விட்டாலும், அந்த கூட்டணியில் தான் இருப்போம் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் மேடம் என்கின்றனர் அவரது கட்சியினர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத கட்சியின் புதிய தலைமையின் சொல்லை தட்டாமல் நிறைவேற்றி வரும் மாஜி போலீஸ்காரரின் தீவிர ஆதரவாளர் ஒருத்தர் தனியாக வாட்ஸ்அப் குரூப் தொடங்கியிருக்கிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பூட்டுக்கு புகழ்பெற்ற மாவட்டத்திலுள்ள மலராத கட்சியில் இரு தரப்பு மோதல் விஸ்வரூபம் எடுத்திருக்கு.. கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த மில்க் பெயரை கொண்டவர், மாஜி போலீஸ்காரரின் தீவிர ஆதரவாளர். இவரது பதவிக்காலம் முடியப் போகும் சூழலில் தனக்கு மிகவும் வேண்டப்பட்டவரான, லிங்கசாமியின் பெயரை பின்னால் கொண்டவரை மாஜி போலீசிடம் பரிந்துரைத்து புதிய மாவட்ட தலைவராக நியமித்தாராம்.. தனக்கும் விசுவாசமாக இருப்பார் என நினைத்து மாஜி போலீஸ் இவரை பதவிக்கு கொண்டு வந்தாராம்.. தற்போது மாநில பொறுப்பில் இருந்து மாஜி போலீஸ்காரர் நீக்கப்பட்டு, புதிய தலைவர் பதவிக்கு வந்த நிலையில், லிங்கசாமியின் பெயர் கொண்டவர், புதிய மாநில தலைவரின் போர்படை தளபதியாய் களத்தில் பம்பரமாக சுழல்கிறாராம்.. மாஜி போலீஸ்காரர் பேச்சையே மதிப்பதில்லை. மேலும், தன்னை சிபாரிசு செய்த மில்க் பெயரை கொண்டவரையும் மதிப்பதில்லையாம்.. மாஜி போலீஸ், மில்க் பெயர் கொண்டவரின் ஆதரவாளர்களையும் புறக்கணித்து, புதிய தலைமையின் சொல்லை தட்டாமல் செய்து வருகிறாராம்.. இதனால் அவரது குட்புக்கிலும் இடம்பிடித்துள்ளாராம்.. ஏற்கனவே மாவட்ட அளவில் மலராத கட்சி நிர்வாகத்திற்கு என தனியாக வாட்ஸ்அப் குரூப் இருக்கு.. ஆனால், புதிய தலைவர் வந்த பிறகு, மாஜிக்கள் அனைவரையும் புறக்கணித்து தனக்கு வேண்டப்பட்டவர்களை மட்டும் வைத்துக் கொண்டு புதிய வாட்ஸ்அப் குரூப்பை தனியாக துவக்கியுள்ளாராம்.. இதனால், பூட்டு மாவட்டத்தில் மாஜி போலீஸ்காரர் அணி, புதிய தலைவர் அணி இரண்டாக செயல்படுகிறதாம்.. இது எதுல போய் முடியப்போகுதோ என அக்கட்சியினர் சிலர் தலையில் அடித்துக் கொள்கின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கடந்த தேர்தலில் புல்லட்சாமிக்கு ஆசைக்காட்டி பதவி சுகம் அனுபவித்த கில்லாடியின் தேர்தல் ஆட்டத்தை ரகசியமாக கண்காணிக்கிறாங்களாமே மாஜிக்கள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘யூனியனான புதுச்சேரியில் ஆந்திராவின் ஏனாமும் ஐக்கியமாம்.. தமிழகத்தின் ஒரு வார்டுக்கு நிகரான இங்கிருந்து மக்கள் பிரதிநிதியாக தொடர்ந்து தேர்வானாராம் ராவ் ஆனவர். கடந்த தேர்தலில் புல்லட்சாமியிடம் ஆசைகாட்டி ஏனாமில் நிறுத்தினாராம்.. உஷாரான புல்லட் சாமியோ மாற்றாக உள்ளூரிலும் நின்றதால் மயிரிழையில் தப்பி அதிகாரத்தில் அமர்ந்தாராம்.. ஏற்கனவே கை அதிகாரத்தில் இருந்தபோது அமைச்சரவையில் தொடர் பதவி சுகம் அனுபவித்த கில்லாடியான ராவ், கட்சிக்கே துரோகமிழைத்தாராம்.. இதனால் மாஜிக்கள் அவர் மீது கொந்தளிப்பில் இருக்க புல்லட்சாமி கட்சியினரும் கில்லாடியிடம் தற்போது ஜாக்கிரதையாக உள்ளார்களாம்.. பொதுத்தேர்தல் நெங்குவதால் மீண்டும் தில்லாலங்கடி வேலைகளை கில்லாடி அரங்கேற்றலாம் என்பதால் இரு கட்சிகளும் உன்னிப்பாக ஆட்டத்தை ரகசியமாக கண்காணித்து வருகிறார்களாம்.. சிட்டிங் பிரதிநிதியுடன் மோதும் விளையாட்டை கில்லாடி வேகப்படுத்தினாலும், இந்த முறை யாரும் ஏமாற தயாராக இல்லையாம்.. அந்தளவு கில்லாடிக்கு புதுச்சேரியில் கொந்தளிப்பு காணப்படுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத கட்சிக்கும், கூட்டணியை உறுதி செய்யாத மாங்கனிக்கும் தொகுதிகளை முடிவு செய்த இலைக்கட்சி விவிஐபியின் முடிவு உள்ளூர் நிர்வாகிகளுக்குள் குமுறலை ஏற்படுத்தி இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மலராத கட்சியுடன் கூட்டணியை தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக இதோ, அதோ என்று இழுத்தடித்து, ‘ரெய்டு’க்கு பயந்து உறுதி செய்த இலை கட்சி விவிஐபி, மாநிலத்தில் மலராத கட்சிக்கும், கூட்டணியை இன்னும் உறுதி செய்யாத நிலையிலேயே மாங்கனிக்கும் சில தொகுதிகளை ஒதுக்க தயாராயிட்டாராம்.. வெயிலூர் மாவட்டத்துல வெயிலூர் தொகுதியை மலராத கட்சி கணக்குல, பல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் மூன்றெழுத்துக்காரருக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளாராம்.. அதேபோல இரண்டெழுத்து இனிஷியலுடன் கூடிய ரிசர்வ் தொகுதியை இப்போதுள்ள கூட்டணி கட்சிக்கு கொடுக்காமல் மலராத கட்சிக்கு கொடுக்கவும் முடிவு செய்துள்ளாராம்.. அணையான தொகுதியை மாங்கனி கட்சி வந்தால் அந்த கட்சிக்கு ஒதுக்கவும் முடிவு செய்துள்ளாராம்.. ஆனால் மாங்கனி கட்சியினர் அதிக ஆர்வம் காட்டாததால் இலைக்கே கொடுக்கப்படும் என அதிமுகவினர் அடித்து கூறுகின்றனராம்.. மீதமுள்ள 2 தொகுதிகளில் ஒன்றை அதே தொகுதியில் கடந்த தேர்தலில் ஆளுங்கட்சி விவிஐபியிடம் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோற்றவருக்கே கொடுக்கவும், குடியேற்ற தொகுதியில் புதியவரை களம் இறக்கவும் விவிஐபி முடிவு செய்துள்ளாராம்.. இதை அறிந்த வீரமானவர், எடக்கானவரிடம் எகிற, போனமுறை என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியும். இந்த முறை சாதியை பார்த்து இல்லாமல், செல்வாக்கு, செலவிடும் திறன் ஆகியவற்றை கருத்தில் கொள்ள போவதாகவும் கூறினாராம்.. இதனால் சீட் கேட்கும் ஐடியாவில் இருந்த அந்த கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் உள்ளுக்குள் குமுறிக்கிட்டு இருக்காங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post முக்கிய தொகுதிகளை கூட்டணிக் கட்சிக்கு தாரைவார்க்க தயாராகியிருக்கும் இலைக்கட்சி தலைவர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article