மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்: தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு

3 hours ago 1

சென்னை,

இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு (2026) நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள்தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. மொத்தம் உள்ள 39 தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்பு இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தார்.

அதே நேரத்தில், மக்கள்தொகை உயர்வை கட்டுக்குள் வைக்காத மாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (புதன்கிழமை) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது.

சென்னை தலைமைச்செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஆளுங்கட்சியான தி.மு.க., பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க., காங்கிரஸ், பா.ம.க., தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக பா.ஜ.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சிகள் அறிவித்துள்ளன. அதே நேரத்தில், அ.தி.மு.க., அ.ம.மு.க., தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, நேற்று முன்தினம் நாகப்பட்டினத்தில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் பங்கேற்று பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "அனைத்து கட்சி கூட்டத்தை அரசியலாக பார்க்காமல் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்" என்று மீண்டும் அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில்தான் அனைத்துக் கட்சி கூட்டம் இன்றைக்கு நடைபெறுகிறது. கூட்டம் தொடங்கியதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச இருக்கிறார். அப்போது, தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அவர் கருத்துகளை தெரிவிக்கிறார். மேலும், கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தை முன்மொழிந்தும் அவர் பேசுகிறார்.

தொடர்ந்து, அனைத்து கட்சி தலைவர்களும் ஒவ்வொருவராக பேச அனுமதிக்கப்படுவார்கள். தீர்மானத்தின் மீது அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து முடித்தவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும். நிறைவாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச இருக்கிறார். அதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும். சுமார் 4 மணி நேரம் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. 

Read Entire Article