பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் எடுத்த அதிரடியானது பாமக-வுக்குள் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. கட்சியின் பொருளாளர் திலகபாமா, ‘பாமக ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. அய்யாவின் இந்த முடிவு தவறு’ என முகநூலில் பகிரங்கமாக வெடித்தார். அவருக்கு கடுமையாக ரியாக் ஷன் காட்டிய பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், ‘நெஞ்சிலே கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இன்றி மருத்துவர் ராமதாஸை வசை பாடி இருக்கும் திலகபாமா உடனடியாக கட்சியிலிருந்து வெளியேறி விடுவது தான் அவருக்கு நல்லது’ என்று அனல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இதனிடையே, ‘பொதுக்குழுவால் தலைவராக தேர்வு செய்யப்பட்ட என்னை ஒற்றை அறிக்கையின் மூலம் நீக்கிவிட முடியாது. நானே பாமக தலைவராக தொடர்கிறேன். 2026-ல் பாட்டாளி சொந்தங்கள் விரும்பும் வலிமையான கூட்டணியை மருத்துவர் அய்யா அவர்களது வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது எனது பெரும் கடமையாகும்’ என அன்புமணியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது பாமக-வினரை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.