தமிழ்நாடு மின் வாரியத்துக்கு சொந்தமான கிடங்குகள் தாம்பரத்தில் உள்ளன. இவற்றில், டிரான்ஸ்பார்மர், பில்லர் பாக்ஸ், மீட்டர், கேபிள், மின் கம்பி உள்ளிட்ட உபகரணங்கள் உள்ளன. போதிய உபகரணங்கள் இருந்தாலும், அங்குள்ள ஊழியர்கள் இவற்றை முறையாக விநியோகிப்பது இல்லை என புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய ஊழியர்கள் சிலர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் உங்கள் குரல் சேவையை தொடர்பு கொண்டு கூறியதாவது: கிடங்குகளில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள ஊழியர்கள், உபகரணங்களை முறையாக வழங்குவதில்லை.