மாவட்டத்தில் 30 அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே ஒழுக்கத்தை மேம்படுத்த நன்னெறி கல்வி

5 hours ago 3

*வீடியோ வெளியிட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி

நாமக்கல் : மாணவ, மாணவிகள் இடையே ஒழுக்கத்தை மேம்படுத்த, நாமக்கல் மாவட்டத்தில் 30 அரசு பள்ளிகளில் நன்னெறி கல்வி அளிக்கப்படுகிறது. இதற்காக மாணவராற்றுபடை என்ற தலைப்பில், 13 குறு வீடியோக்களை வெளியிட்டு ஆசிரியர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.நாமக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் இடையே ஒழுக்கம் மற்றும் நெறிமுறை சார்ந்த மதிப்புகளை உயர்த்த, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் புதிய முயற்சி மேற்கொண்டு உள்ளது.

இதற்காக மாணவராற்றுபடை என்ற தலைப்பில், 13 குறு வீடியோக்களை தயாரித்துள்ளது. ஒவ்வொரு வீடியோவும் 6 முதல் 10 நிமிடங்கள் ஓடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்களின் வெற்றி கதைகள், வாழ்வியல் நிகழ்வுகள், பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், தார்மீக ஓழுக்கம் மற்றும் நெறிமுறை சார்ந்த ஒழுக்கம் போன்றவற்றை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் குட்டி கதைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

தற்போது முதற்கட்டமாக மாணவராற்றுபடை வீடியோக்கள் மூலம், அரசு நடுநிலைப்பள்ளிகளில் 6 முதல் 8 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஒழுக்கம் மற்றும் நன்னெறி கல்வி குறித்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப் படுகிறது. இதற்காக ஒரு வட்டாரத்திற்கு 2 பள்ளிகள் வீதம் 30 அரசு நடுநிலைப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியகைளுக்கான பயிற்சி முகாம், நேற்று நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இதற்கு பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து பேசியதாவது:மாணவ, மாணவிகள் மத்தியில் நல்ல பன்புகள் வளரவேண்டும்.

இரக்க குணம், அடுத்தவர்களுக்கு உதவும் பாங்கு போன்றவை படிக்கும் காலத்திலேயே உருவாக வேண்டும். தாழ்வு மனப்பான்மை இன்றி குழந்தைகள் பள்ளியில் கல்வி கற்க வேண்டும். மாணவ, மாணவியரின் இயல்பை அறிந்து, அவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்.

ஒரு மாணவர் தன்னுடைய இயல்பை முழுமையாக உணரும் போது, அவருக்கு புதிய விஷயங்களை கற்றுகொள்ள வேண்டும். புதியவற்றை படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அதற்கு ஏற்ற வகையில் வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி, ஒரு செயல், ஒரு காட்சி ஒருவருடைய எண்ணத்தையும், நடத்தையையும் மாற்றி விடும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களை, பள்ளி வகுப்பறையில் மாணவ, மாணவியருக்கு போட்டு காட்ட வேண்டும். ஒரு மாதத்திற்கு பின் இந்த வீடியோக்கள் மாணவ, மாணவிகள் மத்தியில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். அதன் பின்னர், மற்ற பள்ளிகளிலும் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் நிறுவனத்தின் விரிவுரையாளர் தேவதராஜ பால்சன், மாணவராற்றுபடை வீடியோக்களை வெளியிட்டு பேசினார். வீடியோக்கள் மூலம் நன்னெறி கல்வி பயிற்சியை வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேஷ்குமார் தொடங்கி வைத்து பேசினார்.

பயிற்சியில் நிறுவன துணை முதல்வர் சந்தோசம், விரிவுரையாளர் சிவபெருமான், நடுநிலைப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். மாணவராற்றுபடை வீடியோக்கள் அனைத்து பள்ளி ஆசிரிய, ஆசிரியகைளும் பயன்படுத்தும் வகையில், டயட், நாமக்கல் என்ற யூடியூப்பிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

The post மாவட்டத்தில் 30 அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே ஒழுக்கத்தை மேம்படுத்த நன்னெறி கல்வி appeared first on Dinakaran.

Read Entire Article