
மும்பை,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ். இவரது அதிரடி ஆட்டத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு உண்டு. ரசிகர்கள் இவரை 'மிஸ்டர் 360' என்றழைப்பர். அந்த அளவுக்கு மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிக்சர் அடிக்கும் திறமை படைத்தவர். விளையாடிய கால கட்டங்களில் ஏராளமான சாதனைகள் படைத்த இவர், 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
இதனையடுத்து ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். அதிலும் கடந்த 2021-ம் ஆண்டோடு விடை பெற்றார். அதன் பின் எந்த வித போட்டிகளிலும் விளையாடவில்லை. ஐ.பி.எல். தொடரில் விளையாடியதன் மூலம் இந்தியாவில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
இந்நிலையில் தற்போது இந்தியா வந்துள்ள ஏபி டி வில்லியர்ஸ், மும்பை மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியுடன் வீல் சேரில் அமர்ந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளார்.
வீல்சேரில் அமர்ந்து தன்னுடைய ஸ்டைலில் அதிரடியான ஷாட்டுகளை அடித்த அசத்தினார். அத்துடன் வீல்சேரில் அமர்ந்த கொண்டே சிங்கிள் ரன்களும் எடுத்தார். இது அவருடன் இணைந்து விளையாடிய மாற்றுத்திறனாளி வீரர்களை உற்சாகப்படுத்தியதுடன், சுற்றியிருந்த ரசிகர்களையும் மகிழ்வித்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.