
சென்னை,
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் மாநில விருது வழங்கி ஊக்குவித்து கௌரவிக்கப்படுவதால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, கீழ்காணும் விருதுகள் 15 ஆகஸ்டு 2025 சுதந்திர தின விழா அன்று வழங்கப்படவுள்ளன.
வ.எண் விருதின் வகை விருது விவரம்
1. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர். 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ. 25,000/- ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் . (மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் வழங்கப்படும்.)
2. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ. 50,000/- ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்.
3. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர். 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ்.
4. மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ்.
5. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர். 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ்.
6. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ்.
மேற்காணும் விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருதாளர்கள், , "https://awards.tn.gov.in"என்ற வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும், கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் 30.6.2025க்குள் விண்ணப்பிக்கலாம். வலைத்தளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை 30.6.2025 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், மேற்படி விருதுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு, சுதந்திர தின விழா நிகழ்வில் முதலமைச்சரால் மாநில விருதுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.