*கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார்
திருவாரூர் : திருவாரூரில் நேற்று நடைபெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார்.
திருவாரூர் மாவட்ட அளவிலான மாற்றுதிறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டமானது நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்ட நிலையில் மனுக்கள் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் மோகனசந்திரன் உத்தரவிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது, மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவரவர்க்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வுகாணும் வகையில் மாவட்ட அளவில் கலெக்டர் அலுவலகத்திலும், திருவாரூர் மற்றும் மன்னார்குடி கோட்ட அளவிலான சிறப்பு குறைதீர் கூட்டமானது ஆர்.டி.ஓ அலுவலகங்களிலும் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மாற்றுதிறனாளிகளுக்காக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதற்கு வயது வரம்பு ஏதும் இல்லை. 18 வயதிற்குகீழ் உள்ளவர்களும் விண்ணப்பம் அளிக்கலாம். மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு, குறைகளுக்கு தீர்வுகாணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்கிட தக்க நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும்.
மேலும் தங்களது இருப்பிட முகவரிக்கான ஆதாரம், குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாளஅட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றின் நகலுடன், தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தலா ரூ 11 ஆயிரத்து 760 வீதம் 10 நபர்களுக்கு ரூ ஓரு லட்சத்து 17 ஆயிரத்து 600 மதிப்பில் மோட்டார் பெருத்திய தையல் இயந்திரம் மற்றும் தலா ரூ 8 ஆயிரத்து 750 வீதம் 7 நபர்களுக்கு ரூ 61 ஆயிரத்து 250 மதிப்பில் இயன் முறை உபகரணம் என மொத்தம் 17 நபர்களுக்கு ரூ ஓரு லட்சத்து 78 ஆயிரத்து 850 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் 7 நபர்களுக்கு இலவச வீட்டு மனைபட்டாவை கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ கலைவாணி, மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலஅலுவலர் புவனா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post மாற்றுதிறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் 17 பயனாளிகளுக்கு ரூ.1.78 லட்சத்து மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.