
சென்னையில் அழகான பெண்களின் உடலில் ஊசி மூலம் ரசாயனத்தை பாய்ச்சி, அவர்களை கருப்பாக மாற செய்து கொலை செய்து வருகிறான், ஒரு 'சைக்கோ' கொலையாளி. கொலையாளியை கண்டுபிடிக்க மும்பையில் இருந்து சென்னை வரும் போலீஸ் அதிகாரி விஜய் ஆண்டனிக்கு, நீச்சல் வீரர் அஜய் தீஷனின் நடவடிக்கையில் சந்தேகம் வருகிறது. ஒரு கட்டத்தில் அஜய் கொலையாளி கிடையாது என்று தெரியவர, அவரிடம் உள்ள அபார ஞாபக சக்தியை கொண்டு கொலையாளியை நெருங்க முயற்சிக்கிறார் விஜய் ஆண்டனி.இதையடுத்து வேறு கட்டத்தில் நகரும் கதையில் எதிர்பாராத திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. கொலையாளி யார்? கொலைகளுக்கான பின்னணி என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.
உடலில் ஒரு பக்கம் கருமை நிறம் தாங்கிய போலீஸ் அதிகாரியாக விஜய் ஆண்டனி படம் முழுக்க 'கழுகு' பார்வையுடன் சுற்றுகிறார். எதார்த்தமான, அழுத்தம் நிறைந்த அவரது நடிப்பு படத்துக்கு பலம் சேர்க்கிறது. கொலையாளியை நெருங்கும் இடம் 'திரில்'. விஜய் ஆண்டனிக்கு பக்கபலமாக பிரிகிடாவின் துடிப்பான நடிப்பும் கவனம் ஈர்க்கிறது.

நீச்சல் வீரராக வரும் அஜய் தீஷன் அறிமுக படத்திலேயே அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தண்ணீரின் பின்னணியில், அவர் யூகிக்கும் காட்சிகள் வியப்பு. சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், ராமச்சந்திரன், தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்க்கும்படி நடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.
யுவாவின் ஒளிப்பதிவில் வியப்பாய் காட்சிகள் நகர்கிறது. விஜய் ஆண்டனியின் இசை படத்துடன் ஒன்றை செய்கிறது. பின்னணி இசையும் மிரட்டல்.
முதல் பாதையில் வேகம் குறைவு. திரைக்கதையில் இன்னும் வலு சேர்த்திருக்கலாம். படத்தின் கடைசி 15 நிமிடங்கள், யூகிக்க முடியாத 'கிளைமேக்ஸ்' காட்சி பலம்.
மார்கன் - அழுத்தக்காரன்