
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 70). இவருடைய மனைவி கனகா (வயது 65). இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது மகன் ஆறுமுகம் தாயின் வீட்டின் அருகே வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தனியாக வசித்து வந்த கனகா வீட்டின் கதவை கடந்த 31ம் தேதி நள்ளிரவு மர்ம நபர் தட்டியுள்ளார். அப்போது வெளியே வந்த மூதாட்டி கனகாவின் முகத்தில் மிளகாய் பொடி தூவி துணியால் முகத்தை மூடி கட்டையால் சரமாரியாக தாக்கியதோடு அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு மர்மநபர் ஓடியுள்ளார். இந்த தாக்குதல், நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மூதாட்டி கனகாவின் மருமகள் வசந்தி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது.
மாமியாரை பழிவாங்க வசந்தி தனது மாமன் மகனை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளார்.
மாமியார் கனகா மற்றும் மருமகள் வசந்திக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வசந்தி தனது மாமியாரை பழி வாங்க வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளார். வசந்தியின் மாமன் மகனான மண்டலவாடி அடுத்த கவுண்டப்பனூர் பகுதியைச் சேர்ந்த மைக்கல்ராஜை(21) இதற்கு பயன்படுத்தி உள்ளார்.
அதன்படி கடந்த 31-ந் தேதி நள்ளிரவு மைக்கல்ராஜ் கனகா வீட்டிற்கு சென்று மிளகாய் பொடி தூவி கட்டையால் அடித்து 4 பவுன் நகையை பறித்து சென்றது போலீசார் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து மாமன் மகனை ஏவி மாமியாரை தாக்கிய மருமகள் வசந்தியை போலீசார் கைது செய்தனர். மாமன் மகன் மைக்கல்ராஜும் கைது செய்யப்பட்டார். அவர்களிடமிருந்து 4 பவுன் நகையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகை பறிப்பு சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.