
சென்னை,
தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மத்திய பாஜக அரசு மக்களாட்சி என்ற மகத்தான அரணை புல்டோசர்களைக் கொண்டு இடித்து தள்ளி நாசம் செய்யும் காரியங்களைத் தொடர்ந்து செய்து வருகிறது. எந்தவித விவாதங்களுமின்றி மக்களைப் பாதிக்கும் சட்டங்களைக் கொண்டு வருவது, சர்வாதிகார போக்கோடு மாநிலங்களை வஞ்சிப்பது தொடர்கதையாகி வருகிறது.
அதன் உச்சமாக அவர்கள் நிறைவேற்றத் துடிப்பது தான் 2027 மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ள இருக்கும் மக்களவைத் தொகுதி மறுவரையறை. 84 வது அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தின் படி 2026 க்கு பின் எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும். இதை நிறைவேற்றி மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத பாஜக ஆளும் மாநிலங்களின் எம்.பி. களின் எண்ணிக்கையை அதிகரித்து தமிழ்நாடு உள்ளிட்ட மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க சதி செய்கிறது பாஜக அரசு.
இச்சதியை ஆரம்பத்திலேயே அம்பலப்படுத்தி , பாதிக்கப்படப் போகும் மாநிலங்களை ஓரணியில் திரட்டி நியாயமான தொகுதி மறைவரையறை மேற்கொள்ள வலியுறுத்தினார் முதல்-அமைச்சர் . அப்போதெல்லாம் அதனை வீண் பயத்தை உண்டாக்குகிறார் என்று மூடி மறைக்க நினைத்தவர்கள் இப்போது 2027 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என அறிவித்தது மூலம் சாயம் வெளுத்து போய் நிற்கிறார்கள்.
கொரோனா காரணமாக 2021 இல் எடுக்காமல் விட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை 2023 இல் எடுத்திருக்கலாம், 2024, 2025 இல் எடுத்திருக்கலாம் ஆனால் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி 2027 இல் எடுப்பதன் நோக்கம் ஒன்றே ஒன்று தான் அது 2027 மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி. களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமே.
இதற்கு என்ன சொல்ல போகிறது பாஜக அரசு.? மோடியும் அமித்ஷாவும் என்ன சொல்ல போகிறார்கள்.? தமிழ்நாட்டின் எம் பி களின் எண்ணிக்கை குறையாது என்ற பழைய ஏமாற்று பல்லவியைப் பாடப் போகிறீர்களா.?
தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. தமிழ்நாட்டின் குரல்வளையை நசுக்கி அரசியல் உரிமைகளற்ற அடிமைகளாக மாற்றும் பாஜக அரசின் சதி திட்டத்தை எல்லாம் அறியாதவர்கள் அல்ல. தமிழ்நாட்டு மக்கள் கேட்பது ஒன்றே ஒன்று தான் திராணி இருந்தால் நாவில் 1% வேணும் உண்மை இருந்தால் நேர்மையாக பதில் அளியுங்கள் ..
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தொகுதி மறுவரையறை நடைபெற்றால் நாடாளுமன்றத்தில் 7.18% என்ற தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவம் குறையுமா.? குறையாதா.?
இல்லை தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப் போவதில்லை என்றால் 2026 இல் காலாவாதியாகும் சட்டத்திருத்தத்திற்கு மாற்றாக மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை தள்ளிவைக்கும் சட்டத்திருத்தம் எப்போது கொண்டுவரப்படும்.?
மத்திய அரசே பதில் சொல்லு. என தெரிவித்துள்ளார்.