மாநில அரசுக்கு பாராட்டுகள்... நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் - முத்தரசன்

3 months ago 9

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கடந்த 2024 ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழகத்தை பெஞ்சல் புயல் தாக்கியது. இதில் காவிரி டெல்டா மாவட்டங்களும், சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களும், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் 69 லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து, 1.50 கோடி தொழிலாளர்களும், பொது மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த பெஞ்சல் புயல் பாதிப்பால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட, கட்டுமானங்களை மறு சீரமைக்க ரூபாய் இரண்டாயிரத்து 475 கோடி தேவை என மதிப்பீடு செய்யப்பட்டு, உடனடியாக ரூ 2 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க உதவ வேண்டும் என மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கு கடிதம் மூலமாகவும், நேரிலும் தொடர்ந்து முறையிடப்பட்டது.

இதற்கு முன்னர் 2023 ஆம் மிக் ஜாம் புயல், பெரு மழையால் ஏற்பட்ட இழப்புகளையும், சேதாரங்களையும் சீரமைக்க ரூ.37 ஆயிரம் கோடி, பேரிடர் நிவாரண நிதி வழங்குமாறு மத்திய அரசிடம் முறையிட்டிருந்தது. ஆனால், ஒன்றிய அரசு நிவாரண நிதி வழங்காமல் முற்றிலுமாக கை கழுவி விட்டது.

இந்த நிலையில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி ஒதுக்கீடு செய்து, அவர்களது வங்கிக் கணக்கில் நிவாரண நிதியை சேர்க்கும் பணியில் தாமாக முன்வந்து ஈடுபட்டிருக்கிறது. இதன் மூலம் 5 லட்சத்து 18 ஆயிரத்து 800 விவசாயிகள் பயன் பெறுவார்கள். நிலை குலைந்து நிற்கும் வாழ்வை நிலைப்படுத்திக் கொள்ள நிவாரண நிதி வழங்கும் தமிழ்நாடு அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றி பாராட்டி, பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது.

இதற்கிடையில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம், ஐந்து மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 1555 கோடி ஒதுக்கீடு செய்து, அது தொடர்பான விபரங்களை அறிவித்துள்ளது. இதில் ஆந்திரா, ஒடிஷா, திரிபுரா, நாகாலாந்து, மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு நிவாரண நிதி வழங்கியுள்ளது. கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து வரும் தமிழ்நாடு அரசுக்கு ஒரு ரூபாயும் நிவாரண நிதி வழங்காமல் தமிழ்நாட்டை புறக்கணித்து வரும் மத்திய அரசு, வரலாறு காணாத பேரழிவை வயநாடு பகுதியில் சந்தித்த கேரள அரசுக்கு நிவாரண நிதி ஒரு ரூபாயும் வழங்கவில்லை. மத்திய அரசின் இந்த வஞ்சக செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்கள் கோரியுள்ள நிவாரண நிதியை வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article