மாநில அரசுகள் மூன்று மாதத்தில் விதிகளை மாற்ற வேண்டும் சிறைச்சாலைகளில் அரங்கேறும் சாதிய பாகுபாடுகளை அனுமதிக்கவே முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2 hours ago 2

புதுடெல்லி: சிறைச்சாலைகளில் சாதிய பாகுபாடுகளை கண்டிப்பாக அனுமதிக்கவே முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறையில் கைதிகளுக்கான பணிகளை ஒதுக்குவதில் சாதி அடிப்படையிலான பாகுபாடு காட்டப்படுவதாக மகாராஷ்டிரா மாநிலத்தை சோ்ந்த பத்திரிகையாளர் சுகன்யா சாந்தா என்பவா் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில்,‘‘ஒன்றிய உள்துறை அமைச்சகம் வகுத்த மாதிரி சிறைக் கையேடுகளின்படி, மாநில சிறைக் கையேடுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டாலும், பல்வேறு மாநிலங்களில் உள்ள சிறைகளில் சாதியப் பாகுபாடு அதிகமாக உள்ளது. குறிப்பாக உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, பஞ்சாப், ஒடிசா, ஜார்க்கண்ட், கேரளா, மகாராஷ்டிரா,தமிழ்நாடு ஆகிய 11 மாநிலங்களின் சிறைக் கையேடுகள், கைதிகளுக்கான பணி ஒதுக்கீட்டில் சாதிய பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, “ கைதிகள் மத்தியில் இத்தகைய சாதிய பாகுபாடு இருக்க முடியாது. இதை அனுமதிக்க முடியாது. சிறை கைதிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தினாலோ அல்லது வைத்திருந்தாலோ அதற்கு மாநில அரசு தான் முழு பொறுப்பாகும். குறிப்பிட்ட சாதிய கைதிகளை வைத்து செப்டிக் டேங்க் சுத்தம் செய்வது, கழிவுகளை அகற்ற வைப்பது என்பதை அனுமதிக்க முடியாது. அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.சிறைச்சாலையில் மட்டுமில்லை எந்த விதத்திலும் சாதிய பாகுபாடுகளை அனுமதிக்கவே முடியாது ‘என்று தீர்ப்பளித்து.

* இந்தியாவின் காலம் என்ன? தலைமை நீதிபதி கேள்வி
மேற்கண்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகி விட்டது. இன்னமும் சாதியப் பிரச்சனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் எதிர்காலம் என்ன என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இதுபோன்ற விவகாரங்களை டாக்டர் அம்பேத்கர் தனது அரசியல் சாசனத்தில் தெளிவாக விளக்கி உள்ளார். அதனை அனைவரும் கவனத்தில் கொண்டு கடைபிடித்து நடக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

The post மாநில அரசுகள் மூன்று மாதத்தில் விதிகளை மாற்ற வேண்டும் சிறைச்சாலைகளில் அரங்கேறும் சாதிய பாகுபாடுகளை அனுமதிக்கவே முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article