*வணிக நிறுவனத்தினருக்கு எஸ்பி எச்சரிக்கை
நாமக்கல் : நாமக்கல் மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து விளம்பர பலகைகளை, போக்குவரத்து போலீசார் நேற்று அதிரடியாக அகற்றினர். தொடர்ந்து இதுபோன்ற விதிமீறலில் ஈடுபடக்கூடாது என வணிக நிறுவனத்தினருக்கு எஸ்பி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல் மாநகரில் உள்ள சாலைகளில், போக்குவரத்துக்கு இடையூறாக வர்த்தகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், தங்களது கடைகளின் பெயர் பலகைகளை வைத்துள்ளனர். இவற்றை மாநகராட்சி நிர்வாகம் காவல் துறை பாதுகாப்புடன், கடந்த சில மாதங்களுக்கு முன் அகற்றியது. இதனால் சாலைகள் அகலமாக காட்சியளித்தது.
ஆனால், ஒரு சில வாரங்களில் மீண்டும் கடைகளின் உரிமையாளர்கள் தங்களது கடைகளின் பெயர் பலகைகளை, கடையின் முன்பகுதியில், மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு வைத்து விட்டனர். இதனால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தி விட்டு செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், விபத்துகள் நடக்க தொடங்கியது.
இதுதொடர்பாக பல்வேறு அமைப்பினர் மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணனிடம் புகார் அளித்தனர்.இதனை தொடர்ந்து, நேற்று மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள, வர்த்தக நிறுவனங்களின் விம்பர பலகைகளை அகற்றும்படி போக்குவரத்து போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார்.
அதன் பேரில், நாமக்கல் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் எஸ்ஐக்கள் குணசிங், வெங்கடேசன் மற்றும் போக்குவரத்து போலீசார் அடங்கிய குழுவினர், நாமக்கல் மாநகரில் உள்ள கடைவீதி மெயின்ரோடு, திருச்செங்கோடு ரோடு, பரமத்தி ரோடு பகுதியில் வர்த்தக நிறுவனத்தினர், போக்குவரத்துக்கு இடையூறாக வைத்திருந்த விளம்பர பலகைகளை அதிரடியாக அகற்றினர்.
மேலும் கடை உரிமையாளர்களிடம், இதுபோல மக்கள் நடந்து செல்லும் பாதையில், விளம்பர பலகைகளை வைக்கக் கூடாது என அறிவுறுத்தினர். நேற்று மாலை நாமக்கல் – திருச்சி ரோடு, சேலம் ரோடு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள விளம்பர பலகைகளை அகற்றினர். இதுகுறித்து மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் கூறியதாவது:
நாமக்கல் நகரில் மெயின்ரோட்டில் போக்குவரத்து இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. கடை உரிமையாளர்கள் விளம்பர பலகைகளை, சாலை வரை நீட்டித்து வைத்துள்ளனர். இதனால் நகரில் நெரிசல் ஏற்படுகிறது. டூவீலர்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். நேற்று 20 கடைகளில் இருந்து விளம்பர பலகைகள் அகற்றப்பட்டது.
மற்ற கடைகளின் உரிமையாளர்கள், தங்களது விளம்ப பலகைகளை எடுத்து கடைக்குள் வைத்து விட்டனர். அகற்றப்பட்ட விளம்பர பலகைகளை வைத்துள்ள கடை உரிமையாளர்களிடம் எச்சரித்து, அவர்களிடம் கடிதம் வாங்கிகொண்டு விளம்பர பலகைகள் திரும்ப ஒப்படைக்கப்படும். மீண்டும் அவர்கள் இதே தவறு செய்தால் அபராதம் விதிக்கப்படுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நாமக்கல் மாநகரில் உள்ள துறையூர் ரோடு, பரமத்தி ரோடு சாலை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டு உள்ளது. சாலையின் இருபுறமும் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. வங்கி, ஓட்டலுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள், தங்களது வாகனத்தை சாலையிலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர். பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கடை வைத்துள்ளவர்கள், தங்களது கடைகளின் விற்பனை செய்யப்படும் பொருட்களையும் சாலையில் ஷெட் போட்டு வைத்துள்ளனர்.
அவர்கள் இதுபோன்று தொடர்ந்து செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் சாலையில் எளிதாக நடந்து செல்லும் வகையில், வாகன போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும். இதற்கு வணிக நிறுவனத்தினர் உரிய ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இவ்வாறு எஸ்பி
தெரிவித்தார்.
The post மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த விளம்பர பலகைகள் அகற்றம் appeared first on Dinakaran.