மாநகராட்சி பகுதிகளில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை தலைமை செயலாளர் திடீர் ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு

5 hours ago 3


சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை தலைமை செயலாளர் முருகானந்தம் திடீரென ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். சென்னை மாநகராட்சி பகுதிகளில், குடிநீர் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், சென்னை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் சாலை வெட்டு சீரமைப்புப் பணிகள், புதிய சாலைகள் அமைத்தல், குளம் தூர்வாருதல், தாங்கல் ஏரி புனரமைப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

குறிப்பாக, சென்னை குடிநீர் வாரியம் சார்பில் முகலிவாக்கம் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் ரூ.99.71 கோடி மதிப்பீட்டில் ஆலந்தூர் மண்டலத்தில் முகலிவாக்கம், வார்டு-156க்குட்பட்ட ராமச்சந்திரன் தெரு மற்றும் பங்களா தோப்பு பிரதான சாலையில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளையும், பெருங்குடி மண்டலத்தில் ரூ.418.20 கோடி மதிப்பீட்டில், வார்டு-181, கொட்டிவாக்கம், வார்டு-183 பாலவாக்கம் பகுதிகளில் உள்ள ராஜா தெரு, எம்.ஜி.ஆர்.சாலையில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, இப்பகுதிகளில் பாதாள சாக்கடைப் பணிகளை விரைந்து முடித்து, வீட்டு இணைப்புகளை உடனுக்குடன் வழங்கி சாலை வெட்டுக்களை சீரமைத்து சாலை அமைக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து, வார்டு-156 முகலிவாக்கம் நியாய விலைக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களின் இருப்பு மற்றும் வழங்கல் குறித்தும், பொருட்கள் வாங்குபவர்களின் கைவிரல் ரேகைப் பதிவு செய்து பொருட்கள் வழங்குவதையும் பார்வையிட்டு, மக்களிடம் கலந்துரையாடி ஆய்வு செய்தார். பின்னர், மழைக்கால முன்னேற்பாடு நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சியின் சார்பில், அடையாறு மண்டலம், வார்டு-177ல் உள்ள ஆறு கண் கால்வாயில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.

அதேபோன்று, எம்.ஆர்.டி.எஸ் பகுதியில் உள்ள இரண்டு குளங்களில் ரூ.32.14 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் செடிகளை அகற்றி, தூர்வாரி, கரைகளை சீரமைக்கும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ச்சியாக, பெருங்குடி ரயில் நிலையம் சாலையில் வேளச்சேரி முதல் பெருங்குடி எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் மற்றும் எம்.ஜி.ஆர் சாலை வரையிலும் ரூ.8.09 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தார்சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், எம்.ஜி.ஆர். சாலையில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் முடிவுற்றவுடன் நெஞ்சாலைத்துறையின் சார்பில் சாலை வெட்டுக்களை சீரமைத்து சாலைகளை விரைந்து அமைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து, பெரும்பாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்குச் சென்று, அங்கு சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள் குறித்தும், சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் பார்வையிட்டு மக்களிடம் கலந்துரையாடி ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ச்சியாக, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-199க்குட்பட்ட பொன்னியம்மன் கோயில் தெருவிற்கு எதிர்புறம் உள்ள ஓ.எம்.ஆர்.

சாலையில் தனியார் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளைப் பார்வையிட்டு, இப்பணிகளை விரைந்து முடித்திடவும், சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீர்செய்து சாலை அமைத்திடவும் அறிவுறுத்தினார். பின்னர், சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட தாங்கல் ஏரியில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இன்போசிஸ் நிறுவனத்தின் ரூ.5 கோடி சமூகப் பங்களிப்பு நிதியிலும், சிறுதுளி தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடனும் ஏரியை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

24.30 ஏக்கர் பரப்பளவில் 158 மில்லியன் லிட்டர் கொள்ளளவு நீர்த்தேக்கம் கொண்ட இந்த தாங்கல் ஏரியானது தற்போது 26.51 ஏக்கர் பரப்பளவில் 300 மில்லியன் லிட்டர் கொள்ளளவு நீர்த்தேக்கம் கொண்ட ஏரியாக புனரமைக்கப்பட்டு வருகிறது. இதில் 1,39,518 கனமீட்டர் வண்டல்கள் தூர்வாரப்பட்டுள்ளது.

மேலும், சராசரியாக 2 மீ. ஆழம் கொண்ட இந்த ஏரியினை 3.5 மீ. வரை ஆழப்படுத்தும் பணி, மணல் அரிப்பு மற்றும் வெள்ளத்தைத் தடுக்கும் வகையில் ஏரியின் கரைகளைப் பலப்படுத்துதல், பறவைகளுக்கான தீவுகளை உருவாக்குதல், கரைகளை உறுதிப்படுத்தி, பறவைகள் மற்றும் பிற வனவிலங்குகளுக்கான வாழ்விடங்களை உருவாக்கிட ஏதுவாக 50 வகையான நாட்டு மரங்கள் 1500 எண்ணிக்கையில் நடவு செய்தல், 1.5 கி.மீ.சுற்றளவில் நடைபாதை, ஏரியைச் சுற்றிலும் வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர் செல்வராஜ், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் பாஸ்கர பாண்டியன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி.சிங், செயல் இயக்குநர் கவுரவ் குமார், தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post மாநகராட்சி பகுதிகளில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை தலைமை செயலாளர் திடீர் ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article