கொல்கத்தா: கொல்கத்தா சட்ட கல்லூரி மாணவி பலாத்கார விவகாரத்தில் அக்கல்லூரியின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் அரசு சட்ட கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு முதலாமாண்டு படிக்கும் 24 வயது மாணவியை அதே கல்லூரியில் முதுநிலை சட்ட படிப்பு படிக்கும் மாணவர்கள் இரண்டு பேர் மற்றும் முன்னாள் மாணவர் உள்பட 3 பேரும் சேர்ந்து பாதுகாவலர் அறைக்கு இழுத்து சென்றுள்ளனர். அங்கு இரவு 7.30 மணி முதல் 10 மணி வரை மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கஸ்பா காவல்நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் தற்போதைய மாணவர்கள் ஜயிப் அகமது(19), பிரமித் முகர்ஜி(20) மற்றும் கல்லூரி முன்னாள் மாணவரும், சட்ட கல்லூரி திரிணாமுல் காங்கிரசின் பரிஷத் பிரிவின் முன்னாள் தலைவர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பின் பொது செயலாளருமான மனோஜ் மிஸ்ரா(31) ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் காவல்துறை கைது செய்தது.
அவர்கள் 3 பேரையும் 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அலிப்பூர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது. மாணவியின் புகாரின் அடிப்படையில் சட்ட கல்லூரி பாதுகாவலரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த நிலையில் பாதுகாவலர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
* சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பு
கொல்கத்தா சட்ட கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக உதவி ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
The post மாணவி பாலியல் பலாத்கார விவகாரம் கொல்கத்தா சட்ட கல்லூரி பாதுகாவலர் கைது appeared first on Dinakaran.