கோவை: மாணவர்களை மூளைச்சலவை செய்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆள் சேர்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக கோவை அரபிக்கல்லூரி முதல்வர் மற்றும் ஊழியரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் (28) என்பவர் பலியானார். சம்பவ இடத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், காரில் பால்ரஸ் குண்டு, ஆணி ஆகியன இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உக்கடம் போலீசார் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு என்ஐஏ அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது. தீவிர விசாரணையில், வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு வைக்க சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. ஜமேஷா முபின் வீட்டில் சோதனையிட்டதில் அங்கு கிலோ கணக்கில் வெடிபொருட்கள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் ஜமேஷா முபின் கூட்டாளிகள், உடந்தையாக இருந்தவர்கள் என மொத்தம் 17 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கு சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையே என்ஐஏ அதிகாரிகள் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் அரபி கல்லூரியில் கடந்த 2023ம் ஆண்டு சோதனை நடத்தினர். அதில், அந்த கல்லூரியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ஆதரவு தொடர்பான ஆவணங்கள், மாணவர்களை மூளைச்சலவை செய்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர வைக்க முயன்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கார் வெடிப்பு வழக்கில் இருந்து தனியாக, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கடந்த ஆண்டு இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை கைது செய்தனர். இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக விசாரணை நடத்த நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை வந்தனர். தொடர்ந்து அவர்கள் போத்தனூர் பகுதியைச் சேர்ந்த அகமது அலி (35), உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்த ஜவஹர் சாதிக் (30) ஆகியோரை கோவை பிஆர்எஸ் வளாகத்தில் உள்ள என்.ஐ.ஏ.அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
அரபு கல்லூரி தொடர்பாகவும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளை இருவரிடமும் கேட்டனர். விசாரணை முடிவில், இருவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் இருவரும் சென்னை என்ஐஏ கிளை அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட அகமது அலி அரபி கல்லூரியின் முதல்வராகவும், ஜவஹர் சாதிக் அங்கு ஊழியராகவும் பணிபுரிந்ததாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post மாணவர்களை மூளைச்சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள்சேர்ப்பு: கோவை அரபிக்கல்லூரி முதல்வர், ஊழியர் கைது appeared first on Dinakaran.