![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39119978-kerala33.webp)
சபரிமலை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப் பின்னர் கடந்த மாதம் ஜனவரி 20-ஆம் தேதி நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் நாளை மாசி மாதம் பிறக்க உள்ளதால் மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அதன்படி இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
நடை திறக்கப்பட்டதும் கோவில் மேல் தந்திரி கண்டரர், ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தீபம் காண்பித்தார். மீண்டும் நாளை காலை 5 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதையடுத்து நாளை அதிகாலை 5 மணி தொடங்கி மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி தொடங்கி இரவு 10 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.
தொடர்ந்து 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரையிலும் தினமும் நெய்யபிஷேகம் ,கலசாபிஷேகம், படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். 17-ந் தேதி இரவு 7 மணிக்கு படிபூஜை முடிந்ததும் 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.