மராட்டிய மாநிலத்தில் புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

5 hours ago 1

மும்பை,

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா நோய், நாளடைவில் உலகம் முழுவதும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்தின. தடுப்பூசி செலுத்திய பிறகு, கொரோனா நோய்த் தொற்றின் பரவல் சற்று குறைந்தது.

2022-ம் ஆண்டு வரை உச்சத்தில் இருந்து, பின்னர் படிப்படியாக நோய்த்தொற்றின் தீவிரத்தன்மையும், இறப்பு விகிதமும் குறைந்திருந்தது. இருப்பினும் வெவ்வேறு வகையில் கொரோனா வைரஸ் உருமாறி தற்போது பெரும் பாதிப்பை கொடுக்காமல் சாதாரண காய்ச்சல் என்ற நிலைக்கு மட்டுமே மாறியுள்ளதே தவிர, அது முற்றிலும் மறைந்துவிடவில்லை.

இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. அந்த வகையில் மராட்டிய மாநிலத்தில் இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நடப்பாண்டில் இதுவரை மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பிற்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2,488 ஆக அதிகரித்துள்ளது.

இதில் மும்பையில் மட்டும் இந்த ஆண்டு 990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மராட்டிய மாநிலத்தில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 36 பேருக்கு ஏற்கனவே பிற உடல்நல பாதிப்புகள் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article