
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கொல்லைமேட்டில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று 108 பால் குட ஊர்வலம் நடைபெற்றது.
காப்பு கட்டி விரதமிருந்து 108 பக்தர்கள் முத்துகுமரன் மலையில் இருந்து பால் குடங்களை சுமந்தபடி கோவிலுக்கு வந்தனர். அப்போது சாமியாடிய நபர் ஒருவர் மரத்தில் ஏறியும், மரம் விட்டு மரம் தாவியும் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
காப்பு கட்டிய ஏராளமான பெண்களும் அருள் வந்து கொளுத்தும் வெயிலிலும் சாமியாடியபடி ஊர்வலமாக சென்றனர். கோவிலை வந்தடைந்ததும் பக்தர்கள் ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
அதேபோல், குழந்தை வரம், திருமண பாக்கியம் வேண்டி ஏராளமானோர் விரதமிருந்து மரத்தில் மஞ்சள் கயிறு கட்டினர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் மோர் மற்றும் அன்னதானம், இனிப்பு வழங்கப்பட்டது.